தீயாக பரவும் கொரோனா.. ரிஸ்க் எடுத்த வங்கதேசம் சென்ற மோடி.. மேற்கு வங்க தேர்தல் காரணமாம்.. எப்படி?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கணிசமான இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மாதுவா இன வாக்காளர்களைக் கவரவே பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலுக்கும் மத்தியில் வங்கதேசம் சென்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்டமாக 36 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி அங்கு முக்கிய போட்டியாளர்களாகவே இல்லை.
தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது. அதேநேரம் தற்போது மாநிலத்தில் நிலவும் அரசுக்கு எதிரான மனநிலை, இந்துக்களின் ஆதரவு ஆகியவற்றுடன் மம்தாவை தோற்கடிக்க வியூகம் வகுத்து வருகிறது பாஜக.
வங்கதேசத்தில் மோடி
இந்நிலையில், கொரோனா பரவல் தொடங்கிய பின் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வங்கதேசத்திற்குச் சென்றுள்ளார். நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பும் 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ரிஸ்க் எடுத்து பிரதமர் மோடி வங்கதேசத்திற்குச் சென்றுள்ளார். மேற்கு வங்கத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையிலேயே பிரதமர் மோடி வங்கதேசத்திற்குச் சென்றுள்ளார்.
ஹரிச்சந்த் தாகூர்
1812 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வங்காளத்தின் (தற்போது வங்கதேசத்தில் உள்ளது) ஓரகண்டி என்ற பகுதியில் பிறந்தவர் ஹரிச்சந்த் தாகூர். அவர் மாதுவா சமூக மக்களால் கடவுளின் அவதாரமாகக் கருதப்படுகிறார். நேற்று மாலை ஓரகண்டி சென்ற பிரதமர் மோடி, ஹரிச்சந்த் தாகூருக்குக் கட்டப்பட்டுள்ள கோயிலில் மரியாதை செலுத்தினார். மேலும், வங்கதேசத்தின் வேர் மாதுவா இன மக்களில் இருந்தே பிறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்க தேர்தல்
சுமார் ஏழு கோடி வாக்காளர்களைக் கொண்டு மேற்கு வங்கத்தில் ஒரு கோடி மாதுவா இன வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 30 தொகுதிகளில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு மாதுவா இன மக்களின் வாக்குகள் உள்ளன. அதேபோல சுமார் 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர்களது வாக்குகள் கணிசமாக உள்ளது. தற்போது வரைகூட ஹரிச்சந்த் தாக்கூரை மாதுவா இன மக்கள் கடவுளாகவே கருதுகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி அவர் பிறந்த இடத்திற்குச் சென்று வழிபட்டுள்ளது வாக்காளர்கள் மனநிலையை மாற்றும்.
குடியுரிமை திருத்த சட்டம்
அதேபோல மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் மாதுவா இன மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. சிஏஏ சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இதன் மூலம் வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள லட்சக்கணக்கான மாதுவா இன மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
மம்தாவும் மாதுவா இன மக்களும்
கடந்த காலங்களில் மேற்கு வங்கத்தில் சாதி ரீதியிலான வாக்குகள் என்பவை இருந்ததில்லை. 2010ஆம் ஆண்டு மம்தா தான் முதன்முதலில் மாதுவா இன மக்களைத் தேர்தலுக்காகப் பயன்படுத்திக்கொண்டார். மாதுவா தலைவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற மம்தா, சட்டசபை தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்தார். மேலும், தேர்தல்களில் மாதுவா தலைவர்களின் மகன்களுக்குப் போட்டியிட வாய்ப்பும் வழங்கினார். கடந்த காலங்களில் மம்தாவின் வெறிக்கு மாதுவா இன மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாகக் கிடைப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
பாஜகவுக்குச் செல்லும் மாதுவா வாக்குகள்
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மாதுவா இன மக்களின் வாக்குகள் பாஜகவிற்கு செல்ல தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக மாதுவா தலைவர்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்தனர். 42 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் பாஜக முதல்முறையாக 18 இடங்களைக் கைப்பற்றியது. அதில் பெரும்பாலான தொகுதிகள் மாதுவா இன மக்கள் அதிகமாக உள்ள தொகுதிகளாகும். இந்த மக்களின் ஆதரவை அதிகரிக்கும் நோக்கத்திலேயே பிரதமர் மோடி தற்போது வங்கதேசம் சென்றுள்ளார். இது தேர்தலில் எப்படி எதிரொலிக்கப் போகிறது என்பது மே 2ஆம் தேதி தெரிய வரும்.