Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு கொரோனா மூன்றாவது அலையை எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது?

Subscribe to Oneindia Tamil
How Tamilnadu will face the 3rd wave of Coronavirus?
Getty Images
How Tamilnadu will face the 3rd wave of Coronavirus?

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியிருக்கும் நிலையில், தமிழ்நாடு மூன்றாவது அலையை எதிர்கொள்ள எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறது?

சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா, "முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், மூன்றாவது அலை என்பது இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தாக்காது என்றும் கொரோனா பெருந்தொற்று ஒவ்வொரு மாநிலத்தையும் பல்வேறு வகையில் பாதித்து இருப்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்குத் தகுந்தவாறு தரவுகளை பகுப்பாய்வு செய்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காலகட்டத்தின்போது இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது. உச்சகட்டமாக ஒரே நாளில் சுமார் 36,000 பேர்வரை புதிதாக பாதிக்கப்பட்டனர். சுமார் ஒரு மாதத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை ஏற்பாடு செய்வதில் மாநிலம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளின் வாயில்களில் ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நின்றன. வெகு சில தருணங்களில் ஆம்புலன்ஸ்களிலேயே சிலர் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்தன.

இந்தப் பின்னணியில்தான், கொரோனாவின் மூன்றாவது அலை தமிழ்நாட்டில் தாக்கினால், அதனை மாநிலம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

"மூன்றாவது அலை தாக்குமா என்பது தெரியாது. இருந்தபோதும் மாநிலம் முழவதும் 80,000 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. கடந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், தற்போது ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது" என்கிறார் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

மூன்றாவது அலை குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கும் என்ற கருத்து இருப்பதால், அதனை எதிர்கொள்ளவும் மாநிலம் தயாராக இருக்கிறது என்கிறார் அவர்.

குழந்தை
Getty Images
குழந்தை

"மூன்றாவது அலையை மூன்று காரணிகள் நிர்ணயிக்கின்றன. ஒன்று, தொடர்ந்து கூட்டம் கூடுவது, மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்வது, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது. இரண்டாவது, எந்த அளவுக்கு தடுப்பூசி போட்டிருக்கிறோம் என்பது. மூன்றாவது, உருமாறிய கொரோனா எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது.

மேலே சொன்ன மூன்று திசைகளிலும் விழிப்புடன் இருக்கிறோம். தொடர்ந்து மருத்துவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது அலையில், இணை நோய்கள் இருந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதால் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்ற கருத்து இருக்கிறது. இருந்தபோதும் மூன்றாவது அலை எப்படிப் பரவினாலும் எதிர்கொள்ள மாநிலம் தயாராக இருக்கிறது" என்கிறார் மாநில மருத்துவத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்.

மூன்றாவது அலை காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, ஆக்சிஜன் ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அவரது கண்காணிப்பில் ஆக்சிஜனை கையிருப்பு வைக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

"ஆக்சிஜன் சேமித்து வைக்கும் திறனை பெரிய அளவில் உயர்த்திவருகிறோம். ஆகவே 3வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது எனக் கருதுகிறோம்" என்கிறார் ஜெ. ராதாகிருஷ்ணன்.

ஆக்சிஜன்
Getty Images
ஆக்சிஜன்

உருமாறிய கொரோனா தொற்றைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள். வெறும் பத்து பேர் மட்டுமே டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்.

"எந்த விதமான கொரானா வைரஸாக இருந்தாலும் வழக்கமான கொரோனா தடுப்பு முறைகள் போதுமானவை. சில தருணங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று ஏற்படலாம். அந்தத் தருணங்களில் அது குறித்து ஆராயப்படுகிறது. ஒரு இடத்தில் அதிகமாக வரும்போது ஏன் அப்படி வருகிறது என ஆராய அங்கு கிடைக்கும் வைரசின் மரபணுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அதை வைத்து மேல் நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்கிறார் ஜெ. ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது, குறிப்பிட்ட அளவுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் இரண்டாவது அலை அளவுக்கு மூன்றாவது அலையின் தாக்கம் இருக்காது என மாநில அரசு எதிர்பார்க்கிறது.

தொடர்ந்து தடுப்பூசிகளை அளிப்பதிலும் மும்முரம் காட்டிவருகிறது. மத்திய அரசு போதுமான அளவில் தடுப்பூசிகளை ஒதுக்குவதில்லை என்பதால், தனியாருக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளைப் பெறவும் முயற்சிக்கிறது மாநில சுகாதாரத்துறை.

கொரோனா விழிப்புணர்வு
Getty Images
கொரோனா விழிப்புணர்வு

தற்போதுவரை தமிழ்நாட்டில் 1.95 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 10 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வைத்து ஒரு மாதத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு தடுப்பூசிகளை அளிக்க முடியும்.

"ஜூலை மாதத்திற்கு 72 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதில் 25 சதவீதம் தனியாருக்கு அளிக்கப்படும். அதாவது 17 லட்சம் தடுப்பூசிகள் தனியாருக்கு அளிக்கப்படும். ஆனால், அதில் தற்போதுவரை 4 லட்சம் தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன. மீதமுள்ள தடுப்பூசிகளை அரசாங்க மருத்துவமனைகளுக்காக பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் மா. சுப்பிரமணியன்.

மாநில அரசுகளின் இந்த முயற்சிகள் ஒருபுறமிருக்க, கடைவீதிகளில் தென்படும் கூட்டமும் கொரொனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் காட்டும் அலட்சியமும் மூன்றாவது அலை குறித்த அச்சத்தை அதிகரித்திருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+