அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், முதல்வர் படம் மட்டும் போதும்.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஊடகங்களில் மத்திய அரசு விளம்பரங்களை வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பதை உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழு பரிந்துரைத்துள்ளது.
தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு விளம்பரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு குழு ஒன்றை நியமித்தது.
ஊடக விளம்பரங்களை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தேசிய நீதித்துறை அகாடமியின் முன்னாள் இயக்குநர் மாதவ மேனன் தலைமையில் லோக்சபா செயலாளர் டி.கே. விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது.
இக்குழு தமது வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:
பிரபலங்களின் பிறந்த நாள், நினைவுநாளுக்கான விளம்பரங்களை முதலில் பட்டியல்படுத்த வேண்டும்.
எந்த அமைச்சகம் சார்பில் மட்டும் விளம்பரம் தரப்பட வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். இதன் மூலம் வெவ்வேறு அமைச்சகங்கள் ஒரு நிகழ்வுக்காக விளம்பரங்கள் வெளியிடுதல் தவிர்க்கப்படும்.
மத்திய அரசு ஊடகங்களில் தரும் விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் படங்கள் இடம்பெறுதலை தவிர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் இதை தவிர்க்க முடியாத நிலையில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் அல்லது முதல்வர் படம் மட்டுமே இடம்பெற வேண்டும்.
எந்த ஒரு தனிநபரையோ அல்லது கட்சிகளையோ அல்லது அரசுகளையோ முன்னிலைப்படுத்துகிற விளம்பரங்களைத் தரக்கூடாது.
அரசியல் தலைவர்களை புகழ்ந்து விளம்பரங்கள் தரக் கூடாது.
இந்த பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்ற பின்னர் மத்திய அரசு இது தொடர்பில் சட்டம் இயற்றிய பின்னர் இவை நடைமுறைக்கு வரும்.