மாணவிகளுக்கு பாதுகாப்பு: பள்ளி தேர்வு கவுன்சிலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடிதம்
டெல்லி: பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொல்லையில் இருந்துவிடுபட உரிய நடவடிக்கை எடுக்கும்படி, இந்திய பள்ளிகள் சான்று தேர்வு கவுன்சிலுக்கு (CISCE) மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர் பள்ளிக்கு இக்கவுன்சில் கொடுத்துள்ள அங்கீகாரத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளதை குறிப்பிட்டுள்ள ஸ்மிருதி இரானி, இந்த பரிந்துரையின் மீது கவுன்சில் நிலைப்பாடு என்ன என்பதையும் வினவியுள்ளார்.
ஆர்.டி.இ சட்டம் தொடர்பாக இந்தாண்டு மார்ச் 26ம்தேதி மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட நெறிமுறைகளையும் தனது கடிதத்தில் ஸ்மிருதி இரானி நினைவுபடுத்தியுள்ளார்.