ஹூட் ஹூட் பாதிப்பு: விசாகப்பட்டினத்தில் லிட்டர் பால், பெட்ரோல் ரூ.100, முட்டை ரூ.15
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளில் ‘ஹூட் ஹூட்' புயலின் தாக்கத்தால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், பால் ஆகியவை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டை விலை ரூ.15ஆக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஹூட் ஹூட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதில் விசாகப்பட்டினம் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது 40 சதவீத அரசு, தனி யார் பஸ்கள் நேற்று மதியம் முதல் இயங்கத் தொடங்கின. சாலைகள், நெடுஞ்சாலைகள் சீரமைப்பு பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதனால் விசாகப்பட்டினம் நகருக்கு வெளியே சுமார் 40-50 கி.மீ. தூரம் வரை லாரி, பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சீரமைப்பு பணிகள் தீவிரம்
பல நகர்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம், தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கம்பங்கள், செல்போன் டவர்களை சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
அத்தியாவசியப் பொருட்கள்
எனினும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி கள்ளமார்க்கெட்டில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர் சமூகவிரோதிகள்.
1லிட்டர் ரூ.100
விசாகப்பட்டினத்தில் நேற்று ஒரு லிட்டர் பால் மற்றும் பெட்ரோலின் விலை ரூ. 100 ஆகவும், குடிநீர் கேன் (20 லி) ரூ. 300 ஆகவும் இருந்தது. மேலும் முட்டை - ரூ. 15, டீ - ரூ. 15, காபி - ரூ. 20, இரண்டு பூரி - ரூ. 50, இரண்டு இட்லி - ரூ. 25 என கள்ளச் சந்தையில் விற்பனை நடைபெற்றது.
வாங்கும் மக்கள்
உணவுக்கான தேவை அதிகமிருப்பதால், விலை அதிகமிருந்தாலும் பரவாயில்லை என பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இவற்றை வாங்கிச் சென்றனர். வங்கி ஏ.டி.எம்.களும் இயங்காததால் பணம் எடுக்கவும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
முதல்வர் எச்சரிக்கை
சில இடங்களில் அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலம் வினியோகிக்கப்பட்டது. பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாபரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய பேரிடர்
இதனிடையே, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷாவில் 24 பேர் உயிரிழப்பையும் ஏராளமான சேதத்தையும் ஏற்படுத்திய ஹூட் ஹூட் புயலை, மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு வலியுறுத்தியுள்ளது.