ஆசை ஆசையாய் லக்னோ மெட்ரோவில் ஏறிய மக்கள்... ஆளைவிட்டால் போதும் என ஓடிய காமெடி!
லக்னோவில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை முதல் நாளிலேயே தொழில்நுட்பப் கோளாறு காரணமாக பாதி வழியிலேயே நின்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
லக்னோ: லக்னோவில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலில் பயணித்த மக்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் ரயிலுக்குள்ளேயே சிக்கித் தவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மெட்ரோ ரெயில் திட்டம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவால் கொண்டு வரப்பட்டது. மெட்ரோ ரெயில் பயணத்தால் பொதுமக்கள் பயணங்களின் நேரம் கணிசமாக மிச்சமாகும் என்பதால் இந்த திட்டத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது.
முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் கடந்த 14 மாத காலத்துக்கு பிறகு இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தனர். சுமார் 8.5 கிலோ மீட்டர் தூரம் வரை 8 ஸ்டேஷன்கனை கடந்து செல்லும் இந்த போக்குவரத்து வசதி சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லக்னோ நகரில் இன்று காலை மெட்ரோ ரயில் தனது முதல் சேவையை தொடங்கியது. அலம்பாக் ஸ்டேஷனை அடைந்த ரயில் அங்கேயே நின்றுவிட்டது. இதனால் அதில் பயணம் செய்த பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
Next station is Transport Nagar.
— Arpit Omer (@arpitjournalist) September 6, 2017
Doors will open from the front.
Plz mind the gap. #LucknowMetro pic.twitter.com/iVHDYkFVfn
ரயில் ஓடிய முதல் நாளிலேயே பாதி வழியில் நின்றது இதனால் ஒரு மணி நேரம் ரயிலுக்கு விளக்குகள் மற்றும் மின்சார வசதியின்றி பயணிகள் தவித்துள்ளனர். இதனையடுத்து பயணிகள் ரயிலின் முகப்பு வழியாக வெளியேற்றப்பட்டனர். ஆசை ஆசையாய் மெட்ரோ ரயிலில் புறப்பட்டவர்கள், ஆளை விட்டால் போதும் என்று வெளியேறினர். முதல் நாளிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் முகம் சுளித்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.