நாய் குட்டிகளை உயிரோடு எரித்து ரசித்த ஹைதராபாத் சிறுவர்கள்.. அதிர வைக்கும் வைரல் வீடியோ
ஹைதராபாத்: குட்டி நாய்களை நெருப்பில் உயிரோடு போட்டு எரித்து கொடூரத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நெஞ்சை இளக்கும், இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
சென்னையில் எம்பிபிஎஸ் மாணவர்கள் இருவர் நாய்க் குட்டியொன்றை கட்டிடத்தின் மேலிருந்து கீழே தூக்கி போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி நீங்கும் முன்பு அதைவிட மிக கொடூரமான ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது, விலங்குகளை நேசிப்போருக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
நெருப்பை மூட்டினர்
ஹைதராபாத் நகரின் முசீர்பாத் பகுதியிலுள்ள ஏக் மினார் மசூதிக்கு அருகேயுள்ளது ஒரு இடுகாடு. கடந்த 16ம் தேதி மாலையில் சில சிறுவர்கள் இங்கு சென்று, கட்டை, காகிதத்தால் நெருப்பை மூட்டியுள்ளனர்.
நெருப்பில் நாய்
நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததும், 3 நாய் குட்டிகளை தூக்கி நெருப்புக்குள் போட்டுள்ளனர். உடல் வெந்து, வலியால் அவை அலறி துடித்து வெளியே ஓடி வந்த நிலையில், கம்புகளை வைத்து அந்த நாய்களை மீண்டும் நெருப்புக்குள் தள்ளி அவை முழுவதுமாக கருகி சாகும்வரை பார்த்து ரசித்துள்ளனர் அந்த சிறுவர்கள்.
குரூர மகிழ்ச்சி
இந்த கொடூர சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து பேஸ்புக்கில் ஷேர் செய்து மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆபத்தின் அறிகுறி
குற்றவாளிகள் சிறுவர்கள் என்றபோதிலும், இன்னும், அடையாளம் தெரியவில்லை என்று போலீஸ் தரப்பு கூறுகிறது. பிஞ்சு மனங்களில் இப்படிப்பட்ட குரூர புத்தி ஊற்றெடுக்க தொடங்கியுள்ளதை ஆபத்தின் அறிகுறியாக பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.