கணவர் அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மோடியின் மனைவி பேட்டி
அகமதாபாத்: தமது கணவர் அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத் தயார் என்று நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியின் மனைவி ஜஷோடாபென் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜஷோடாபென் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த மோடி, முதல் முறையாக எனது பெயரை மனைவி என்று குறிப்பிட்டிருந்தது தொடர்பாக மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக அவருக்கு நன்றியும் தெரிவிக்கிறேன்.
இதற்கு முன்பு அவர் எனது பெயரை குறிப்பிட்டதில்லை. எப்போதும் என்னைப் பற்றி தவறாக பேசியதும் இல்லை. அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.
நான் அவரது மனைவி. எப்போதும் அவரது மனைவியாகவே இருப்பேன். எங்களது விவாகம் ரத்தாகவில்லை. அவ்வகையில், நாங்கள் பிரிந்து விடவில்லை, சேர்ந்தே இருக்கிறோம். நாட்டுக்கு சேவையாற்ற அவர் வீட்டை விட்டு சென்றார். அதனால், நாங்கள் தனியாக உள்ளோம்.
1987-ம் ஆண்டு அவருடன் பேசினேன். நான் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது நானும் அவருடன் சேர்ந்து சிரமப்பட வேண்டாம் என்று அவர் கருதினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர் கேட்டபோது, ‘நான் ஏன் கலந்துக் கொள்ளக் கூடாது?.. அழைப்பு வந்தால், நிச்சயம் செல்வேன்' என்றும் கூறினார்.
தன்னுடன் வந்து தங்கிக் கொள்ளும்படி மோடி அழைத்தால், நீங்கள் போவீர்களா? என்ற கேட்டபோது, சற்றும் தாமதிக்காமல், ‘அவர் கேட்டுக் கொண்டால் போவேன்' என்றார்.