ஆம்புலன்ஸ் தர மறுத்து விட்டார்கள்... மனைவியின் சடலத்தை சுமந்த ஒடிஷா நபர் கண்ணீர்!
புவனேஷ்வர்: மருத்துவமனை வாகனத்திற்கு ஏற்பாடு செய்ய மறுத்ததாலேயே தனது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து வந்ததாக ஒடிஷாவை சேர்ந்த தானா மாஜ்ஹி தெரிவித்துள்ளார்.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள காலாஹன்டி அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் தானா மாஜ்ஹி என்பவரின் மனைவி அமாங் டெய்(42). அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மருத்துவமனை அமாங்கின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாகன வசதி செய்து தரவில்லை.
ஏழையான தானாவால் வாகனத்திற்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தனது மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமந்து 10 கிலோமீட்டர் நடந்து சென்றார்.
வாகனம்
தானா மாஜ்ஹி சடலத்தை தூக்கிச் செல்வதை பார்த்த சிலர் அவருக்கு உதவி வாகனத்திற்கு ஏற்பாடு செய்தனர். அவர் மருத்துவமனை நிர்வாகிகளிடம் வாகனம் கேட்டு கெஞ்சியும், அழுதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
உத்தரவு
தானா தனது மனைவியை தோளில் சுமந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகிவிட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சடலம்
தானா மாஜ்ஹி யாரிடமும் கூறாமல் தனது மனைவியின் சடலத்தை எடுத்துச் சென்றதகாவும், மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தால் வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்றும் மாவட்ட கலெக்டர் பிருந்தா தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு
என் மனைவி இரவு 12.30 மணிக்கு உயிர் இழந்தார். அவரது சடலத்தை எடுத்துச் செல்ல வாகனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சினேன். அவர்கள் மறுத்ததால் தான் சடலத்தை தோளில் சுமந்து வந்தேன் என்று கூறி அழுதார் தானா மாஜ்ஹி.