சிறையில் அடைத்தால்.. இன்னும் ஆபத்தானவனாக மாறிவிடுவேன்.. இம்ரான் கான் பகிரங்க மிரட்டல்
இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ''என்னை சிறையில் அடைத்தால் இன்னும் ஆபத்தானவனாக மாறுவேன்'' என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது.
இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு அதிகரித்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
பதவியிழந்த இம்ரான் கான்
இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்தன. இதில் புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
நீதிபதிக்கு மிரட்டல்?
இதனால் பிரதமராக இருந்த இம்ரான் கான் தற்போது எதிர்க்கட்சி தலைவராக மாறிவிட்டார். தற்போது இம்ரான் கான் ஆளும் ஷெபாஸ் ஷெரிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், நீதிபதி ஒருவருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இம்ரான் கான் ஜாமீன் மனு
இந்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு நிலவியது. எனினும், நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்றார். இதனால், கைதில் இருந்து இம்ரான் கான் தற்காலிகமாக தப்பியிருந்தார்.
திட்டமிட்டு அப்படி பேசவில்லை
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இம்ரான் கான் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசரணைக்கு ஆஜரானார். அப்போது போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் 10 ஆயிரம் பிணைத்தொகையுடன் வருகிற 12 ஆம் தேதிவரை முன் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது. முன்னதாக, இம்ரான் கான் திட்டமிட்டு அப்படி பேசவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இம்ரான் கானின் விளக்கத்தை நிராகரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.
நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
இம்ரான் கான் ஆஜர் ஆனதையொட்டி உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தை நோக்கி திரண்டு வந்த இம்ரான் கான் ஆதரவாளர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அன்றைய தினம் நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
ஆபத்தானவனாக மாறுவேன்
உயர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இம்ரான் கான், நீதிமன்ற வளாகத்தில் இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் போடப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து இம்ரான் கான் கூறுகையில், ''என்னை மட்டும் ஜெயிலுக்கு அனுப்பினால் நான் இன்னும் ஆபத்தானவனாக மாறுவேன். நான் அதிகம் பேசப்போவது இல்லை. ஏனென்றால் எனது கருத்தை திரித்து விடுகிறார்கள்.
மறைமுகமாக தொடர்பில் இல்லை
நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஆட்சியாளர்கள் விரும்பியதை செய்யட்டும். ஆனால் தற்போது இருக்கும் நிலையற்ற தன்மைக்கு ஒரே தீர்வு மீண்டும் தேர்தல் நடத்துவது மட்டுமே. நான் ஆட்சியில் இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் பலிகடா ஆக்கவில்லை. ஆனால் சில வழக்குகள் தவறாக கையாளப்பட்டன. அது குறித்து எனக்கு பிறகுதான் தெரியவந்தது. பாகிஸ்தானின் முக்கிய அரசியல் தலைவர்கள் யாருடனும் நான் மறைமுகமாக தொடர்பில் இல்லை'' என்றார்.