நாடாளுன்ற தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன்: அத்வானி அறிவிப்பு
காந்திநகர்: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் பா.ஜ.க மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி.
வாஜ்பாய்க்கு அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அத்வானி பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் பிரதமராக முடியவில்லை. இந்த பொதுத் தேர்தலிலாவது தன் பிரதமர் கனவு நிறைவேறும் என எதிர்ப்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. அவரது எதிர்ப்பையும் மீறி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டார்.
இதனால், மனக்கசப்படைந்த அத்வானி சிலகாலம் மோடியுடன் பாராமுகமாகக் காணப்பட்டார். இதற்கிடையே தனது அரசியல் பயணம் குறித்து தனது வலைப்பக்கத்தில் நேற்று முந்தினம் கருத்து தெரிவித்திருந்தார் அத்வானி. அதில், கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் கோபாவில், ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீகமலம்' என்ற புதிய பாஜக அலுவலகத்தை அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் அத்வானியும் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அத்வானி. அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது:-,
நாடாளுன்ற தேர்தலில் போட்டியிடுவதில் நான் உறுதியாக இருக்கிறேன். ‘டெல்லி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை. பிறகு ஏன் அங்கு போக வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், கேசுபாய் பட்டேல் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவேன் எனத் தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் மற்ற எந்த பிரச்சினைகளையும் பேச விரும்பவில்லை என்றார்.
அத்வானி இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், அவர் ராஜ்ய சபை எம்பியாகிவிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என அத்வானி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது குஜராத் மாநிலம் காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ள அத்வானி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியா? அல்லது தொகுதி மாற்றமா? என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இதற்கிடையே, அடுத்த தேர்தலில் தான் விரும்பும் தொகுதியில் அத்வானி போட்டியிடலாம் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.