ஐஏஎஸ் அதிகாரி சாவு: சிபிஐ விசாரணை கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் பேரணி! ஸ்தம்பித்தது பெங்களூரு!!
பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐயிடம் அளிக்க வலியுறுத்தி, பெங்களூரில் இன்று நடைபெற்ற பிரமாண்ட போராட்டங்களால், நகரில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
வணிக வரித்துறை அமலாக்கப்பிரிவு கூடுதல் கமிஷனர் டி.கே.ரவி மர்மான முறையில் மரணமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து மாநில சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

டி.கே.ரவி சாவின் பின்னணியில், ரியல் எஸ்டேட் அல்லது மணல் கடத்தல் மாஃபியாக்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சிகளும், பல தன்னார்வ அமைப்புகளும் சந்தேகிக்கின்றன. எனவே இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக உள்ளது. இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை மாநில அரசு தனது முடிவை மாற்றவில்லை.
இதனிடையே, ரவி சார்ந்த ஒக்கலிக ஜாதி (கவுடா) சங்கத்தினர், இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பேரணி நடத்தி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க ஒக்கலிக சங்கம் முடிவு செய்தது.
இதையடுத்து, ஒக்கலிகர் சங்கம் அமைந்துள்ள, குவெம்பு அரங்கத்தில் இருந்து மாபெரும் பேரணி இன்று மதியம் கிளம்பியது. அந்த பேணி, ஜேசி ரோடு, கெம்பேகவுடா ரோடு வழியாக, மைசூர் வங்கி சர்க்கிளின் அருகேயுள்ள, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தது. பிறகு தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் மனுவை கலெக்டர் வி.சங்கரிடம் அளித்த ஒக்கலிக சங்கத்தினர், அங்கிருந்து சுதந்திர பூங்காவரை ஊர்வலம் சென்று தர்ணா நடத்தினர்.

இந்த போராட்டத்தில், பட்னாயக்கனஹள்ளி மடாதிபதி, நஞ்சாவதூத் மடாதிபதி, உலக ஒக்கலிகர் மடாதிபதி குமார் சந்திரசேகரநாத் சுவாமி, மேலவை உறுப்பினர்கள், விஸ்வநாத் நாராயண், ராமச்சந்திர கவுடா, முன்னாள் அமைச்சர்கள் செலுவராயசாமி, சோமண்மா, ஆர்.அசோக், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, வி.வி.புரம் கல்லூரி முதல்வர் சுதா, தலைமையில், அக்கல்லூரியின் மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களும் பேரணி நடத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். "வேண்டும், வேண்டும் சிபிஐ விசாரணை வேண்டும், நேர்மையான அதிகாரிக்கு பரிசு மரணமா" என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இப்போராட்டங்களால் நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.












Click it and Unblock the Notifications