தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணத்தை பாங்காக்கில் இருந்து 'ஆட்டைய போட்ட' கிரெடிட் கார்டு கொள்ளையர்கள்!!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ்பால் மேனனின் வங்கிக் கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலமாக கிரெடிட் கார்டு கொள்ளையர்கள் பணத்தை திருடியிருப்பது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார் அலெக்ஸ்பால் மேனன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகளால் இவர் கடத்தப்பட்டு 12 நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு தேர்தல் அதிகாரியாக மாற்றப்பட்டார் அலெக்ஸ் பால் மேனன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பேஸ்புக் பக்கத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து தமது வங்கிக் கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறார்.
அவரது பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 24-ந் தேதியன்று மூன்று முறை மொத்தமாக ரூ14 ஆயிரத்தை பாங்காங்கில் இருந்து ஏ.டி.எம். மூலமாக கொள்ளையர்கள் திருடியிருக்கின்றனர். அவரது வங்கிக் கணக்கில் அதற்கு மேல் பணம் இல்லாத நிலையிலும் ஏ.டி.எம். கொள்ளையர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் இருக்கின்றனர்.
ஆனால் அலெக்ஸ் பால் மேனனுக்கு மறுநாள் காலையில்தான் இதற்கான எஸ்.எம்.எஸ்.கள் வந்தும் சேர்ந்திருக்கிறது. இப்போது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் அனுப்பி வைத்திருக்கிறார் ஐ.ஏ.எஸ். அலெக்ஸ்!
200 வங்கிக் கணக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ்பால் மேனன் வங்கிக் கணக்கில் இருந்த 14 ஆயிரத்தை தாய்லாந்து கொள்ளையர்கள் திருடிவிட்டதாக புலம்புகிறார்..அதே சத்தீஸ்கர் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியோ 200 வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை குவித்து வைத்து அதிரவும் வைத்திருந்தார்.
சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறையில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை இலக்கு வைத்து சோதனை நடத்தினர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பி.எல். அகர்வால் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மட்டும் 200 வங்கிக் கணக்குகள் இருப்பது கண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வேளாண்துறை செயலராக இருந்தவர் பி.எல். அகர்வால். இவருக்கு சொந்தமான 200 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் பெரும்பாலான வங்கிக் கணக்குகள் போலி பெயர்களில் உருவாக்கப்பட்டிருந்தன. அதாவது வீட்டில் சமையல் வேலை செய்கிறவர், தோட்ட வேலை செய்கிறவர் என பலரது பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி வைத்திருந்தார்.
அத்துடன் பி.எல். அகர்வால் பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக குவித்திருப்பதும் இந்த சோதனையில் தெரியவந்தது.
அதேபோல் அப்போது மத்திய பிரதேசத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.ஏ.எஸ். தம்பதிகள் இருவரை அம்மாநில அரசு சஸ்பென்ட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.. அலெக்ஸ்பால் மேனன் போலவும் ஒரு அதிகாரிகள்!!