இரட்டை இலை முடங்கினா... அடுத்த ஆபரேஷனுக்கு ரெடியாகும் அதிமுக அணிகள்
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தை வாங்க சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் போட்டா போட்டியிட முடிவு செய்துள்ளன.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கினால், சேவல் சின்னத்தை கேட்டு பெற ஓபிஎஸ் தரப்பும், சசிகலா தரப்பும் திட்டமிட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு முதல் முறையாக ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்கவுள்ளன. வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணியினர் அணுகினர். அப்போது சசிகலா தரப்பின் விளக்கங்களை எடுத்துரைத்து ஒரு மனுவும், ஓபிஎஸ் தரப்பின் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இரட்டை இலை
இந்நிலையில் உண்மையான அதிமுக தாங்களே என்றும், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் நியமனத்தை செல்லாது என்று அறிவக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு தாக்கல் செய்தனர்.
ஏட்டிக்கு போட்டி
இதேபோல் ஓபிஎஸ் அணியினர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த அடுத்த நாளே சசிகலா தரப்பைச் சேர்ந்த தம்பிதுரை உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். சசிகலா நியமனத்தை ஜெயலலிதா நியமனத்துடன் தம்பிதுரை ஒப்பிட்டு பேசினார்.
அதிமுக விதிகளுக்கு முரண்
இதைத் தொடர்ந்து அவைத் தலைவர் மதுசூதனன் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டது அ.தி.மு.க. விதிமுறைகளுக்கு முரணானது என்றும், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சட்டரீதியாக உரிமை இல்லை என்றும் கூறியிருந்தார்.
சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ்
இந்த மனு தொடர்பாக, தங்கள் தரப்பு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கூடிய பிரமாண பத்திரங்களை 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு கோரி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் மற்றும் டி.டி.வி. தினகரனுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து, 21-ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அவரை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டு உள்ளது.
6,000 பிரமாண பத்திரம் தாக்கல்
ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 6,000 பேர் கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். அந்த பிரமாண பத்திரங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான 11 எம்.பி.க்கள், 12 எம்.எல்.ஏ.க்கள், அதிமுக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் என பல தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை இறுதி முடிவு
இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பு விளக்கங்களை பெற்ற பின்னர் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து நாளை தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும். மேலும் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் வாய்ப்பு உள்ளது.
முடக்கினால் என்ன செய்வது
அவ்வாறு இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் வேறு சின்னம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா சேவல் சின்னத்தை போராடி பெற்றதை போல் இரு தரப்பினர் அந்த சின்னத்தை பெற போராடி வருகிறது.