சஞ்சய் தத் விடுதலையில் விதிமீறலா? மீண்டும் ஜெயிலுக்கே அனுப்பிடுறோம்- மகாராஷ்டிரா அரசு
தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டதில் விதிமீறல் இருந்தால் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப ஆட்சேபணை இல்லை என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
மும்பை : நடிகர் சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டதில் விதிமீறல் இருந்தால் அவரை மீண்டும் சிறைக்கே அனுப்புவதில் ஆட்சேபணை இல்லை என்று மகாராஷ்டிரா அரசு மும்பை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் சோதனையிட்டதில் ஏ.கே. 56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. எனினும் தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தது.
ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் தத், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் ஏரவாடா சிறையில் 2013, மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை பரோலில் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, தண்டனை முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, எந்த நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார் என்ற புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகர் சஞ்சய் தத்திவிற்கு விதிகளை மீறி விடுதலை அளிக்கப்பட்டதாகக் கருதினால் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்புவதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறியுள்ளார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் 5 ஆண்டுகளில் சஞ்சய் தத்திற்கு எத்தனை நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சஞ்சய் தத்திற்கு 4 மாதங்கள் பரோலும், விடுமுறையாக ஒரு மாதம் 14 நாட்களும் அளிக்கப்பட்டதாகக் கூறியிருந்தது.