அடங்காத ராம்தேவ் கோஷ்டி-இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் இந்தியாவையே மத மாற்றம் செய்வதாக பகீர் புகார்
ஹரித்வார்: இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாபா ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார். அலோபதி மருத்துவர்களால்தான் கொரோனா மரணங்கள் என ராம்தேவ் கூறியதற்கு ரூ1,000 கோடி நட்ட ஈடு கேட்டு இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் இந்த புகாரை ராம்தேவ் தரப்பு வைத்துள்ளது.
கொரோனாவுக்கு அலோபதி மருத்துவமுறையில் தீர்வு காண முடியவில்லை; அலோபதி மருத்துவத்தை எடுத்துக் கொண்டதால் மருத்துவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கனோர் பலியாகிவிட்டனர்; அலோபதி என்பது முட்டாள்தனமானது என சகட்டுமேனிக்கு பாபா ராம்தேவ் பேசியிருந்தார்.
கொந்தளிப்பும் வருத்தமும்
பாபா ராம்தேவின் இந்த பேச்சு இந்திய மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலையிட்ட பிறகு, ராம்தேவ் தமது கருத்தை திரும்பப் பெறுவதாக கூறியிருந்தார். தம்முடைய கருத்துக்கு வருத்தமும் தெரிவித்தார் ராம்தே.
ரூ1,000 கோடி நட்ட ஈடு
இருப்பினும் பாபா ராம்தேவின் இந்த கொச்சையான கருத்துக்கு, ரூ1,000 கோடி நட்ட ஈடு கேட்டு இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் கிளை அவதூறு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக ராம்தேவ் தரப்புக்கு 6 பக்க நோட்டீஸையும் இந்திய மருத்துவர் சங்கம் அனுப்பி வைத்திருந்தது.
ராம்தேவின் கோஷ்டி புகார்
இந்நிலையில் ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால் மீது அடுக்கடுக்கான மதமாற்றப் புகார்களை முன்வைத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். ஆச்சார்யா பாலகிருஷ்ணா தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவையே கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதில் டாக்டர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என குற்றம்சாட்டியிருந்தார்.
ராம்தேவ் தரப்புக்கு கண்டனம்
ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பையும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தங்கள் மீதான தொடர்ச்சியான புகார்களில் இருந்து தப்பிக்க இதுபோன்ற அவதூறு புகார்களை ராம்தேவ் தரப்பு தொடர்ந்து பரப்பி வருவதாக நெட்டிசன்கள் கடுமையாக கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.