ஓகி புயல் எதிரொலி... தென் தமிழகம், கேரளாவிற்கு இந்திய வானிலை மையம் 'ஆரஞ்ச்' அலெர்ட்!
ஓகி புயல் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளா பலத்த சேதத்தை காணும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆரஞ்ச் அலெர்ட்டை இந்திய வானிலை மையம் அளித்துள்ளது.
Recommended Video
டெல்லி: ஓகி புயல் காரணமாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால் தென் தமிழகம் மற்றும் கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 8.30 மணியளவில் ஓகி புயலாக மாறியது. இது இலங்கை மற்றும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஒட்டியுள்ள கடற்பகுதியில் நீடிக்கிறது. ஓகி புயலானது மேலும் மேற்கை நோக்கி நகரும் என்று தெரிகிறது, இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த சூறை காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துளள்து.
ஓகி புயல் காரணமாக தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போன்று காற்றின் வேகமும் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்துடன் காணப்படும்
கடல் மட்டத்தை பொறுத்த வரை அலைகள் சீற்றத்துடன் எழும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த பகுதிகளை பாதிக்கும்?
தெற்கு கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கிஇ கொல்லம், பத்தனம் திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்திக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. வீடுகள், சாலைகள் சேதம் அடைவதோடு, விளைபயிர்கள், வாழை, பப்பாளி மரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
கடலுக்கு செல்ல வேண்டாம்
தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா பகுதியை ஒட்டியுள்ள கடலில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓகி புயல் குறித்த முன் எச்சரிக்கை செய்தியில் இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் மெசேஜ் என்று குறிப்பிட்டுள்ளது.
தயாராக இருப்பதற்காக
வானிலை முன் எச்சரிக்கைகளில் 3 வித நிற எச்சரிக்கைகள் தரப்படுகின்றன. மஞ்சள் நிற எச்சரிக்கை என்றால் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆரஞ்ச் நிற எச்சரிக்கை என்றால் தயார் நிலையில் இருக்க வேண்டும். சிவப்பு நிற எச்சரிக்கை என்றால் மழை, புயலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.