மீனுக்கு வலை போட்டா.. அட என்ன இது.. உள்ளே 7 அடி நீள பாம்பு.. வெளியே எடுப்பதற்கு பட்டபாடு இருக்கே!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மீன் வலையில் சிக்கிய 7 அடி நீள பாம்பால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளின் முயற்சியால் பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
வனப்பகுதிகள் அதிகம் காணப்படும் மாநிலமாக கருதப்படுவது சத்தீஸ்கர் மாநிலமாகும். இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது.
சத்தீஷ்கரின் நிர்வாக தலைநகரமான கோர்பா மாவட்டமும் இந்த கனமழைக்கு தப்பவில்லை. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தோடு பல பகுதிகளில் பாம்புகளும் அடித்து வரப்படுவது அப்பகுதி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரோஷம் காட்டிய பாம்பு
குறிப்பாக கோர்பா மாவட்டத்தில் கொத்து கொத்தாக பாம்புகள் வெள்ள நீரில் அடித்து வரப்படுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். இவ்வாறாக படையெடுக்கும் பாம்புகளை பிடிக்க அங்குள்ள மக்கள் வலைகளை விரித்து வைத்துள்ளனர். அப்படி கோர்பா மாவட்டத்தின் குஸ்முண்டாவை ஒட்டியுள்ள சுரக்சார் என்ற இடத்தில் விரிக்கப்பட்ட ஒரு மீன் வலையில் சுமார் 7 அடி நீளம் கொண்ட பெரிய பாம்பு அகப்பட்டது. இது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வலையில் அகப்பட்டதால் கடும் கோபம் அடைந்த 7 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு, அங்கும் இங்குமாக சீறி ஆக்ரோஷம் காட்டியது.

வனத்துறையினர் மீட்டனர்
பாம்பின் ஆக்ரோஷத்தை கண்டு அங்கு கூடியிருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். வலையில் இருந்து விடுவித்தால் பாம்பு தங்களை கடித்து விடும் என்ற பீதி அவர்களிடையே ஏற்பட்டது. இதனால் கலக்கம் அடைந்த மக்கள் வனத்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு வலையில் பிடிபட்டிருந்த பாம்பை லாவகமாக மீட்டனர். பின்னர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த பாம்பு தமன் வகையை சேர்ந்தது என்றும், சுமார் 7 அடி நீளம் கொண்டது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உஷார் நிலையில் மீட்பு குழு
மழைக்காலங்களில் சத்தீஷ்கரில் பாம்புகள் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் ஊருக்குள் வருவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதனால், இதுபோன்ற நிகழ்வுகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க மீட்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். இருந்தாலும் சில கிராமங்கள் மிகவும் தொலை தூர பகுதிகளிலும் சரியான போக்குவரத்து வசதியற்றும் இருப்பதால் மீட்பு குழுவினர் விரைவாக வருவதில் சிக்கல் உள்ளது. இதனால், தாமதம் ஏற்படும் போது மக்கள் கோபம் அடைந்து பாம்பை அடித்து கொல்லக்கூடாது என்று வனத்துறையினர் கிராம மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கடித்துவிடும் என பயந்தோம்
7 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு அகப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வலையில் அகப்பட்ட பிறகு பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டதால் அதை விடுவித்தால் கடித்து விடும் என்று நாங்கள் பாம்பின் அருகே செல்லவில்லை. எனினும், சரோஜ் குமார் என்ற இளைஞர், மீட்புக்குழுவுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ராகேஷ் மனிகாபுரி என்ற வனத்துறை காவலர், வலையை அறுத்து பாம்பை மீட்டதோடு வனப்பகுதியில் விட்டார்."என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications