வடஇந்தியாவை மிரட்டும் மின்வெட்டு.. செல்போன் வெளிச்சத்தில் பிரசவம்! ஒடிசாவில் அரங்கேறிய சம்பவம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏற்பட்ட மின்தடையால் சுகாதார மையத்தில் மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச்லைட் வெளிச்சம் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
Recommended Video
தமிழகத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் 3 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர். இதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் மின்தடையால் பாதிக்கப்பட்டு வருகிறது.
நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சரிந்துள்ளது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இந்தியாவில் ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், அரியானா, உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் மின்தடை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவிலும் மின்தடை
இந்த மின்வெட்டு பிரச்சனையை ஒடிசா மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் விட்டு விட்டு அறிவிக்கப்படாத வகையில் மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் மின்தடையால் மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

மருத்துவ சேவை பாதிப்பு
ஒடிசா மாநிலம் கஞ்சம் போல்சாராவில் சமுதாய சுகாதார மையம் உள்ளது. இந்த சுகாதார மையத்தில் தினமும் ஏராளமான பிரசவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது மின்தடையால் அவ்வப்போது கஞ்சம்போல்சாரா சுகாதார மையத்திலும் மருத்துவ சேவைகள் தடைப்பட்டு வருகிறது.

செல்போன் வெளிச்சத்தில் பிரசவம்
இந்நிலையில் தான் சுகாதார மையத்தில் 21 வயது நிரம்பிய பெண் பிரசவத்தால் துடித்தார். அவருக்கு டாக்டர், ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். மின்சாரம் தடைப்பட்டு இருந்ததால் பிரசவம் பார்க்க போதிய வெளிச்சம் இல்லை. இதையடுத்து மெழுகுவர்த்தி ஏற்றியும், செல்போன் லைட் பயன்படுத்தியும் பிரசவம் பார்க்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

குடும்பத்தினர் எதிர்ப்பு
இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவ மையத்தில் ஜெனரேட்டர், பேட்டரி இல்லாதது மக்களின் உயிரை பாதிக்கும். இதற்கு தீர்வு காண வேண்டும்'' என்றனர்.

விசாரணைக்கு உத்தரவு
இதுபற்றி டாக்டர் பிரன்சியா பிரதம் கூறுகையில், ‛‛ஜெனரேட்டர் வசதி குறைபாட்டால் மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச்சை பயன்படுத்தி பிரசவம் பார்த்தோம். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.'' என்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மருத்துவ அதிகாரி உமா சங்கர் மிஸ்ரா, குடும்ப நலத்துறையின் மாவட்ட கூடுதல் மருத்துவ அதிகாரி சரோஜினி தேவிக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications