இந்த ஊரில் வங்கி, வீடுகள் என எதற்கும் கதவே இல்லை
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் எந்த வீட்டுக்கும் கதவு இல்லை. இருப்பினும் மக்கள் திருட்டு பயம் இல்லாமல் உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் நெவாஸா தாலுகாவில் உள்ளது சனி ஷிங்னாபூர் கிராமம். அந்த கிராமத்தில் வங்கி, வீடுகள் என எதற்கும் கதவு கிடையாது. சனி பகவான் தங்களை பாதுகாப்பார் என்று மக்கள் நம்புவது தான் வீடுகளுக்கு கதவு இல்லாமல் இருப்பதற்கு காரணம். பல தலைமுறையாக இந்த கிராமத்தில் வீடுகளுக்கு கதவே இல்லாமல் உள்ளது.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,
பல ஆண்டுகளுக்கு முன்பு சனி பகவான் பக்தர்களின் கனவில் வந்து வீடுகளுக்கு யாரும் கதவை வைக்க வேண்டாம் என்று தெரிவித்தார். நான் உங்களை எல்லாம் பாதுகாக்கையில் கதவுகள் எதற்கு என்று கேட்டார். அதனால் அன்றில் இருந்து வீடுகளுக்கு கதவுகள் இல்லாமல் உள்ளது என்றனர்.
வீடுகள் தவிர்த்து அந்த கிராமத்தில் உள்ள யுகோ வங்கிக்கு கூட பூட்டு இல்லை. வங்கியின் முன் கதவு கண்ணாடியால் ஆனது. ஆனால் அதற்கு பூட்டு கிடையாது. தெரு நாய்கள் உள்ளே நுழையாமல் இருக்க கதவை மட்டும் மூடி வைத்துள்ளனர்.
கதவுக்கு பூட்டு இல்லாமல் இருப்பதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்று வங்கி அதிகாரி நாகேந்தர் ஷெஹ்ராவத் தெரிவித்துள்ளார்.