கோல்கொண்டா கோட்டையில் நடக்கிறது தெலுங்கானா மாநிலத்தின் சுதந்திர தின கொண்டாட்டம்
கோல்கொண்டா கோட்டையில் நடக்கிறது தெலுங்கானா மாநிலத்தின் சுதந்திர தின கொண்டாட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் சார்பிலான சுதந்திர தின விழா கோல்கொண்டா கோட்டையில் வைத்து நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தவரை ஹைதராபாத்தில்தான் சுதந்திரதின விழா நடைபெற்றுவந்தது. புதிய மாநிலமாக தெலுங்கானா உருவாகியுள்ள நிலையில் கோல்கொண்டாவில் சுதந்திரதின நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மிக்க கோட்டை
ஹைதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் 400 அடி உயர மலைமீது அமைந்துள்ளது கொல்கொண்டா கோட்டை. குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவை கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள், வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர்.
சந்திரசேகர ராவ் விருப்பம்
சுதந்திர தின விழாவில் புதிய மாநிலத்தின் முதலாவது முதல்வரான சந்திரசேகர ராவ் தேசிய கொடியேற்ற உள்ளார். இதையொட்டி கோல்கொண்டா கோட்டைக்கு நேரில் சென்று அவர் ஆய்வு நடத்தினார். இது முழுக்க முதல்வரின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 ஆயிரம் மக்கள் பார்க்கலாம்
கோல்கொண்டா கோட்டையின் ராணி மகால் பகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரம் மக்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
கலாசாரத்தை காண்பிக்க...
தெலுங்கானாவின் பாரம்பரியம், கலை, கலாச்சாரத்தை உலகத்திற்கு எடுத்துக்காண்பிக்க கோல்கொண்டா கோட்டை உதவும் என்பதால் அங்கு வைத்து சுதந்திரதின நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.