இந்தியா - சீனா எல்லை பதற்றம்: இரு நாட்டு ராணுவத்தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை
இந்தியா - சீனா நாடுகளிடையே எல்லையில் நடைபெறும் பதற்றத்தை தணிக்க விரைவில் இரு நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக்: இந்தியா - சீனா நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் நேற்று லடாக்கில் உள்ள சுசூலில் பிரிகேட் ரேங்க் வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் ராணுவ தளபதிகள் இடையேயான பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியா-சீனா படைகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இரு தரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
லடாக் பிரச்சனை குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாஸ்கோவில் இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில் எல்லையில் தற்போதுள்ள சூழ்நிலை இரு தரப்புக்கும் உகந்ததாக இல்லையென்பதால் இரு தரப்பு எல்லைப் படைகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
விரைவில் படைகளை மீட்டுக் கொண்டு, இருதரப்பினரும் முறையான இடைவெளி கடைப்பிடித்து பதற்றத்தைத் தணிக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளைப் பின்பற்றி எல்லைப் பிரச்சினையில் கருத்தொற்றுமை கொண்டு இந்திய - சீன உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
வேறுபாடுகள் தகராறுகளாக மாறாமல் தடுக்க வேண்டும். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு செயலிலும் இருதரப்பினரும் ஈடுபடக்கூடாது என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளை வாபஸ் வாங்கவில்லை. இது பெறும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வெள்ளிக்கிழமையன்று இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ, விமான மற்றும் கடற்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினர். அஜித் தோவல் பிரதமர் மோடியை சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து விளக்கியுள்ளனர்.
லடாக் மோதல்.. இந்தியா - சீனா இடையே எல்லையில் நடந்த பேச்சுவார்த்தை.. உடன்படிக்கை எட்டப்படவில்லை!
இந்த சூழ்நிலையில் லடாக்கில் உள்ள சுசூலில் பிரிகேட் ரேங்க் வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை காலை 11 மணியில் இருந்து 3 மணி வரை நடைபெற்றும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இந்தியா - சீனா நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் பதற்றம் தணியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.