"ஆஸ்ட்ரோசாட்".. இந்தியாவின் குட்டி "ஹப்பிள்"
டெல்லி: அமெரிக்காவின் ஹப்பிளுடன் ஒப்பிட முடியாவிட்டாலும் கூட கிட்டத்தட்ட இது ஒரு குட்டி ஹப்பிள் என்று சொல்லலாம். அதுதான் இந்தியா முதல் முறையாக ஏவியுள்ள இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ஆஸ்ட்ரோசாட்.
இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான 'ஆஸ்ட்ரோசாட்' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளானது புற ஊதாக் கதிர்கள், குறைந்த மற்றும் அதிக திறன் கொண்ட எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தின் நகர்வு செயல்பாடுகள், கிரகங்களைப் பற்றியும் இது தகவல் அனுப்பும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளியில் உள்ள எக்ஸ்ரே கதிர்கள், புறஊதா கதிர்களை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக செயற்கைகோள்களை அனுப்ப திட்டமிட்டது. அதற்காக ‘அஸ்ட்ரோசாட்' என்ற நவீன தொலை தொடர்பு வசதிகளுடன் கூடிய செயற்கைகோள் ஒன்றை வடிவமைத்தது. அந்த செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி., -சி30 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோளானது, பூமியில் இருந்து 650 கி.மீ., உயரத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
5 கருவிகள்...
புற ஊதாக்கதிர்கள், குறைந்த மற்றும் அதிக திறன் கொண்ட எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்காக இந்த செயற்கைக்கோளில் 5 கருவிகள் உள்ளன. அவையாவன: யுவிஐடி (அல்ட்ரா வையலட் இமேஜிங் டெலஸ்கோப்), எல் எ எக்ஸ் பி சி ( லார்ஜ் ஏரியா எக்ஸ்-ரேட் ப்ரொபோர்சனல் கவுண்டர்), எஸ் எக்ஸ் டி ( சாப்ட் எக்ஸ்ரே டெலஸ்கோப்), சி இசட் டி ஐ (காட்மியம் ஜிங்க் டெலுரைட் இமேஜர்), எஸ் எஸ் எம் ( ஸ்கேனிங் ஸ்கை மானிடர்)
கருந்துளை எக்ஸ்ரே கதிர்கள்...
அவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள கருந்துளையில் இருந்து (பிளாக் ஹோல்) வரும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்ய முடியும். அதன்மூலம், நட்சத்திரத்தின் மூலம் பற்றிய தகவல்கள், பால்வெளிக்கு அப்பாலுள்ள கோள்களில் நிகழும் உயர் ஆற்றல் நிகழ்வுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை அறியலாம்.
பூமியைச் சுற்றி வரும்...
இந்த ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளானது 97 நிமிடங்களுக்கு ஒருமுறை என நாளொன்றிற்கு 15 முறை பூமியை வலம் வந்தபடியே இருக்கும். இதன் இரண்டு புறங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் செயற்கைக்கோளுக்குத் தேவையான ஆற்றல் பெறப்படும்.
ஆண்டெனா மூலம் தகவல்...
இந்த செயற்கைக்கோளில் ஆண்டெனா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பூமியைத் தொடர்பு கொள்ள இயலும். இந்த ஆண்டெனாவின் மூலம் பெங்களூருவில் உள்ள பையலாலுவில் உள்ள ரிசீவர் மூலம் தகவல்களைப் பெற இயலும். ஒவ்வொருமுறை இது பையலாலுவைக் கடக்கும் போது தகவல்கள் தானே ரிசீவர் மூலம் பெறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31வது ராக்கெட்...
இது, பி.எஸ்.எல்.வி., வரிசையில் 'இஸ்ரோ' அனுப்பிய 31வது ராக்கெட் ஆகும். பி.எஸ்.எல்.வி., மூலம் 84 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
4வது இடத்தில் இந்தியா...
இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் மட்டுமே விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியா 4வது நாடாக இணைந்துள்ளது. அதேசமயம், வளரும் நாடுகளில் முதல் இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
அமெரிக்க செயற்கைக்கோள்...
'ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோளுடன் அமெரிக்கா உட்பட 6 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப் பட்டுள்ளன. இதையும் சேர்த்து 'இஸ்ரோ' இதுவரை 51 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்க செயற்கைக்கோளை இந்தியா அனுப்புவது இதுவே முதல்முறை.
எடை குறைவானது...
1990ல் அமெரிக்கா அனுப்பிய, ஹப்பிள் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. குட்டி ஹப்பிள் என்று வர்ணிக்கப்படும் 'ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோள் அதை விட 10 மடங்கு எடை குறைவானதாகும்.
ஆயுட்காலம்...
இதன் எடை 1,513 கிலோ ஆகும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். ஆஸ்ட்ரோசாட்டை விண்ணில் ஏவ 180 கோடி ரூபாய் செலவானது.
சிறப்பம்சம்...
இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதுவரை மற்ற நாடுகள் அனுப்பியுள்ள வானியல் ஆய்வுக்கான செயற்கைகோள்கள் குறைந்த அலைவரிசைகளை மட்டுமே ஆய்வு செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இஸ்ரோ அனுப்பியுள்ள அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் குறைந்த, அதிக ஆற்றல் கொண்ட அலைவரிசைகளையும் ஆய்வு செய்யும் திறன் கொண்டது.
முக்கிய மைல்கல்...
இந்த நிகழ்வானது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.