ரயில்களில் ஆர்ஏசி இருக்கைகள் அதிகரிக்க திட்டம்- ஜன. 17 முதல் அமல்
ரயில்களில் ஆர்ஏசி இருக்கைகள் ஒதுக்கீட்டை அதிகரிக்கப் போவதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜனவரி 17 முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது.
டெல்லி: ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஆர்ஏசி என்று குறிப்பிட்டிருந்தால் ரயிலில் பயணம் செய்வது உறுதியாகி விட்டது என்று அர்த்தம். ஆனால் படுக்கை வசதியில்லாமல், இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டியிருக்கும்.
ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் ஆர்ஏசி ஒதுக்கீடு எண்ணிக்கை தற்போது 5 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 7ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 14 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு வசதி கிடைக்கும். 3 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஆர்ஏசி ஒதுக்கீடு எண்ணிக்கை 2ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 4ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 8 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு வசதி கிடைக்கும்.
மேலும் 2 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஆர்ஏசி ஒதுக்கீடு எண்ணிக்கை 2ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 3ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 6 பேருக்கு இடவசதி உறுதியாகும் என்று ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வசதி வரும் ஜனவரி 17ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.