ரயில் விபத்தில் துண்டான கொச்சி இளைஞரின் இரு கைகளையும் ஆபரேஷன் மூலம் பொருத்தி சாதனை!
கொச்சி: ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த 30 வயதான மனு என்பவருக்கு, சாலை விபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் கைகள் ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டன.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமநையில் நடைபெற்ற ஆபரேஷன் நடந்தது. 16 மணி நேரம் நடந்தது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவும், கைகள் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து, நோயால் பாதிப்பு ஏற்பட்டு மூளைச் சாவு நிலையை அடைந்தோரின் உறுப்புகளை தானம் செய்யும் விழிப்புணர்வு சமீப காலமாக பிரபலமடைகிறது.
இனி பிழைக்கவே மாட்டார் என்ற நிலையில் பெற்றோர், உறவினர்கள் சம்மதத்தில், அந்நோயாளியின் உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகின்றன. கண், இருதயம், சிறுநீரகம், நுரையீரல், எலும்பு போன்ற உறுப்புகளையே தானம் செய்யும் போக்கு உள்ளது. இதேபோல "கை'யையும் தானம் செய்யலாம். உலக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், ப்ரான்ஸ் நாடுகளில் இதுவரை 110 பேருக்கு கை மாற்று ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல்முறையாக கொச்சியில் கை மாற்று ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அம்ரிதா மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவின் தலைமைமருத்துவர் டாக்டர் சுப்ரமணிய ஐயர் தலைமையில் நடைபெற்ற ஆபரேஷனில் 20 டாக்டர்கள் பங்கேற்றனர். 16 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆபரேசனில் ரயில் விபத்தில் இழந்த இரண்டு கைகளையும் திரும்ப பெற்றார் மனு.
இந்தியாவில் முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆபரேசன் மூலம் கைகளை பெற்ற மனு என்பவரை செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்து டாக்டர் சுப்ரமணிய ஐயர் பேசினார்.
பிறவியிலோ, வாகன விபத்திலோ, இயந்திரத்தில் சிக்குவதாலோ மணிக்கட்டு பகுதியை ஒருவர் இழந்துவிட்டால் எந்த வேலையையும் செய்ய இயலாது. அவருக்கு "ரி பிளான்டேஷன்' என்ற முறையில் கையை பொருத்தலாம். இதற்கு துண்டான கையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஐஸ் பெட்டிக்குள் வைத்து கொண்டு வரவேண்டும். மற்றொன்று "டிரான்ஸ் பிளான்டேஷன்' என்ற முறையில், கையை தானமாக பெற்றும் பொருத்த முடியும்.
இதற்கு "மைக்ரோ சர்ஜரி' என்ற தொழில்நுட்பம் உதவுகிறது. ரத்தம், சிறுநீரகம் போல "கை' தானமாக கிடைத்தால் போதும். மூளைச் சாவு அடைந்தவரின் கையை எடுத்து, தேவைப்படுவோருக்கு பொருத்துவதன் மூலம், அவருக்கு "புதிய கை' கிடைக்கிறது.
"மைக்ரோ சர்ஜரி' என்பது நுணுக்கமான அறுவை சிகிச்சை. நுண்ணிய ரத்தநாளங்களை மைக்ரோஸ் கோப் மூலம் பலமடங்கு பெரிதாக்கி பார்த்து, அவற்றை இணைப்பது. இதன் மூலம், சாதாரணமாக பொருத்துவதைவிட, புதிய உணர்வு, விரல்கள் இயக்கம் போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் கையை இழந்தவர்கள் பெரிதும் பயனடைவர் என்றார் டாக்டர்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை ஆபரேசன் நடைபெற்றது. இதுநாள்வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த மனுவிற்கு ஆபரேசன் செய்த கைகளில் ரத்த ஓட்டம் அதிகரித்தது. மாதந்தோறும் இவரது கைகள் பரிசோதனை செய்யப்படும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான மொத்த செலவையும் மாதா அமிர்தானந்தமாயி அளித்துள்ளார் என்றும் டாக்டர் தெரிவித்தார்.