மோடி, அமித்ஷா தலைமையில், இந்தியா மீண்டும் உலகின் 'ஜகத்குருவாகும்'- ராஜ்நாத்சிங்
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, முத்த தலைவர் அத்வானி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் .
இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் பொறுப்பை அமித் ஷாவிடம் வழங்குவதாக ராஜ்நாத் சிங் முறைப்படி அறிவித்தார். அமித் ஷாவுக்கு சால்வை அணிவித்து பாஜக தலைவர் பொறுப்பு நிர்வாகிகள் முன்னியில் ஒப்படைத்தார் ராஜ்நாத்சிங்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மிகப்பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அமித்ஷாவை ஏன் பாஜக தலைவராக்க வேண்டும் என்று சில கேள்விகள் எழுந்தன. உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு அமித் ஷாவே காரணம். அமித் ஷா கட்சிக்கு அளித்த அர்ப்பணிப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது.
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு, மோடியும் தொண்டர்களுமே காரணம். பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக கட்சி. கடினமாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் தலைவர் பொறுப்புக்கு வரமுடியும். அதே நேரம் மக்கள் நமக்கு அளித்துள்ள ஆதரவை மெத்தனமாக எடுத்துக்கொள்ள கூடாது. இப்போதுதான் நமக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது.
பெற்ற மிகப்பெரும் வெற்றிக்காக கட்சி தொண்டர்களிடம் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் அல்லாமல் தனி மெஜாரிட்டியில் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள ஒரே கட்சி பாஜக தான். கொள்கையோ தொண்டர் பலமோ இல்லாத கட்சி காங்கிரஸ் . உலகுக்கே, அன்பு, அமைதி, ஆன்மீகம், அறிவுக்கு வழிகாட்டிய நாடு இந்தியா. எனவே இந்தியாவை ஆன்மீக பூமி, முக்தி தேசம் என்பார்கள். நரேந்திரமோடி மற்றும் அமித் ஷா தலைமையில் இந்தியா மீண்டும் உலகின் 'ஜகத்குரு' அந்தஸ்தை அடைய வேண்டும். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.