ஈராக்கில் சிக்கியுள்ள பிற இந்தியர்களையும் மீட்க முழு முயற்சி: உயர் அதிகாரி உறுதி
டெல்லி: ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.
ஈராக்கில் இந்திய செவிலியர்கள் 46 பேர் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: நர்சுகளை காப்பாற்ற ஈராக்கிற்கு உள்ளேயும், வெளியேயும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்.
இதன் விளைவாக, தங்களது விருப்பத்துக்கு விரோதமாக கடத்தப்பட்ட இந்திய நர்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துவர இந்திய விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஈராக் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இணைச் செயலாளர் மட்டத்திலான அதிகாரியும் உடன் இருப்பார். நாளை காலை கொச்சியில் நர்சுகளை இறக்கிவிடும் அந்த விமானம் தேவைப்பட்டால் டெல்லி வரும். இதே விமானத்தில் கிர்குக் பகுதியில் சிக்கியிருந்த 70 இந்தியர்களும் தாயகம் திரும்புகிறார்கள்.
ஈராக்கிலுள்ள பிற இந்தியர்களையும் தாயகம் கொண்டுவர அனைத்துவகையான முயற்சிகளையும் இந்திய அரசாங்கம் செய்து வருகிறது. எனவே அரசை நம்புங்கள். இக்கட்டான இந்த தருணத்தில் நாம் ஒருவருக்கொருவர் அரவணைப்பாக இருக்க வேண்டுமே தவிர, எதிரும் புதிருமாக மாறிவிடக்கூடாது. அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும்வரை இந்திய அரசு திருப்திப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.