தொடரும் கடற்படை கப்பல் விபத்துக்கள்... 7 மாதத்தில் 13 விபத்து 22 மரணங்கள்
டெல்லி: விசாகப்பட்டினத்தில், நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணியின் போது நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்துடன் கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 13 கப்பல் விபத்துகள் நடைபெற்றுள்ளன அதில் 22 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படையின் கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். அரிஹந்த் என்ற அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பல் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று பணி நடந்து கொண்டிருந்தபோது, ஒரு தொட்டியின் அழுத்தத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த தொட்டியின் மூடி திடீரென தொழிலாளர்களின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் அமர் (24) என்ற தொழிலாளி உயிரிழந்தார். மேலும் அம்ஜத்கான், விஷ்ணு என்ற 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் விபத்துக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
13 கப்பல் விபத்துக்கள் 22 மரணங்கள்
கடந்த 7 மாதங்களில் 13 கப்பல் விபத்துகள் நடைபெற்று உள்ளன. அதில் மிக பெரிய விபத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ‘ஐ.என்.எஸ். சிந்துரக்ஷாக்' என்ற போர்க்கப்பல் கடலில் மூழ்கியதாகும். இந்த விபத்தில் 18 வீரர்கள் பலியானார்கள்.
‘ஐ.என்.எஸ். ஐராவத்’
மேலும், கடந்த மாதம் தொடக்கத்தில் ‘ஐ.என்.எஸ். ஐராவத்' என்ற போர்க்கப்பல் தரைதட்டியதும் அதில் கமாண்டிங் அதிகாரி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.என்.எஸ் விராட்
மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, விமானம் தாங்கி, ஐ.என்.எஸ். விராட் போர் கப்பலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் ஒரே விமானம் தாங்கி போர்க்கப்பலான, ஐ.என்.எஸ். விராட், 50 ஆண்டுகள் பழமையானது.
ஐ.என்.எஸ் கொங்கன்
டிசம்பர் 4 ம் தேதி விசாகப்பட்டினம் கடலில் ஐ.என்.எஸ் கொங்கண் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதே போல் கடந்த ஆண்டு, டிசம்பர் 23-ம் தேதி ஐ.என்.எஸ் தல்வார் கப்பல், மீன்பிடி கப்பலுடன் மோதியது.
கப்பலில் விரிசல்
ஜனவரி 17ம்தேதி ஐ.என்.எஸ் சிந்துகோஷ் கப்பல் நிலை நிறுத்தும் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. ஜனவரி 20ம்தேதி ஐ.என்.எஸ் விபுல் கப்பலில், பல்வேறு சோதனைகளுக்கு பிறகும், கப்பலின் ஒரு பகுதியில் கசிவு தொடர்ந்தது. அதேபோல ஜனவரி 22 ம் தேதி ஐ.என்.எஸ் பெட்வா கப்பலின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. 2014, ஜனவரி - "ஐ.என்.எஸ்., சிந்து கோஷ்' திடீரென தரை தட்டி நின்றது.
ஐ.என்.எஸ். சிந்து ரத்னா
மும்பையில் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்துரத்னா' என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் திடீர் தீ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி கடற்படை அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று கடற்படை தளபதி அட்மிரல் டி.கே. ஜோஷி பதவி விலகினார்.
ஐ.என்.எஸ் கொல்கத்தா
மும்பை மசாகான் கடற்படைத் தளத்தில், ஐ.என்.எஸ் கொல்கத்தா யார்ட் 701 என்ற போர்க் கப்பலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை மஜகாவ் கப்பல் கட்டும் தளத்தில் மார்ச் 7ம் தேதியன்று இந்த கப்பலில் தீயணைப்பு கருவிகள் சரியாக செயல்படுகின்றனவா என்று சோதனை செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக, கார்பன் டை ஆக்சைடு நிரப்பப்பட்ட கொள்கலனின் மூடி உடைந்து, வாயு கசிவு ஏற்பட்டது.