பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த திட்டம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
லக்னோ: பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சராக பதவியேற்ற பின்னர் இன்று சொந்த தொகுதியான உத்தரப்பிரதேசத்தின் லக்னோவுக்கு வருகை தந்தார் ராஜ்நாத்சிங். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது:
உள்நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு சந்தித்து வரும் சவால்கள் தீர்க்கப்படும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு முடங்கிப்போய் இருந்தது. அதை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வர சிறிது காலமாகும்.
பயங்கரவாதம், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதம் போன்ற பிரச்சனைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த திட்டம் வகுக்க வேண்டியது அவசியம். அதை தற்போது எனது அமைச்சகம் சவாலாக எடுத்து கொண்டு செய்து வருகிறது.
அதன் விவரங்களை வெளியிட மாட்டேன். இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications