தமிழ், கன்னடம், இந்தி, பஞ்சாபி என பல மொழிகளில் பதவியேற்ற எம்.பி.க்கள்!
டெல்லி: லோக்சபாவில் எம்.பி.க்கள் பலர் அவரவர் தாய்மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
லோக்சபாவில் 510 எம்.பி.க்கள் வியாழக்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டனர். ஒரே நாளில் 510 பேர் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அப்படி அவர்கள் பதவியேற்றுக் கொண்டபோது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக...
சமஸ்கிருதம்
பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜும், உமா பாரதியும் சமஸ்கிருதத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
சிவசேனா
சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் மராத்தியில் பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் வீர சிவாஜி, சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை போற்றி பதவியேற்றனர். அவர்களில் பலர் ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் ஹிந்த் என்று கூறி அமர்ந்தனர். சிவசேனாவைச் சேர்ந்த சதாசிவ் லோகந்தே சாய் பாபாவின் பெயரால் பதவியேற்றார்.
பிறந்தநாள்
பாஜகவைச் சேர்ந்த நானாபாவ் ஃபல்குன்ராவ் படோலுக்கு நேற்றைய தினம் சிறப்பானது. காரணம் அவர் எம்.பியாக பதவியேற்றது மட்டும் அல்ல. நேற்று தான் அவரின் பிறந்தநாள்.
பொன். ராதாகிருஷ்ணன்
தமிழக பாஜக தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் தனது தாய்மொழியான தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
கேரளா
கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் மலையாளம், ஆங்கிலத்தில் பதவியேற்றனர். ஆனால் கொடிகுன்னில் சுரேஷ் மட்டும் இந்தியில் பதவியேற்றார்.
பல மொழிகள்
சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவ்ர் பஞ்சாபியிலும், ஜுவல் ஓரம் ஒடியாவிலும், மன்சுக்பாய் தன்ஜிபாய் வசாவா குஜராத்தியிலும், சர்பானந்தா சோனோவல் அஸ்ஸாமியிலும், ஸ்ரீராமுலு கன்னடத்திலும் பதவியேற்றுக் கொண்டனர்.
காலணிகள்
பீகாரைச் சோர்ந்த பாஜக எம்.பி.யான ஹுகும் தியோ நாராயண் யாதவ் பதவியேற்கும் முன்பு தனது காலணிகளை கழற்றிவிட்டார்.
சங்மா
சிலர் பதவியேற்கையில் தங்களுக்கு அளிக்கப்பட்டவற்றை வாசிக்காமல் கூடுதலாக பேசியதால் சபாநாயகர் இருக்கையில் இருந்த பி.ஏ. சங்மா குறுக்கிட்டு எழுதிக் கொடுத்திருப்பதை மட்டும் படிக்குமாறு தெரிவித்தார்.