அரசியல் கட்சி தொடங்குகிறார் "இரும்பு பெண்" இரோம் ஷர்மிளா
இம்பால்: ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த, இரோம் ஷர்மிளா வருகிற வருகிற 10ம் தேதியன்று புதிய கட்சியை தொடங்குகிறார்.
மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண் என அழைக்கப்படுபவர் இரோம் ஷர்மிளா (44). சமூக ஆர்வலரான இவர் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2000ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

ஆனால், ஷர்மிளா தற்கொலைக்கு முயற்சிப்பதாக வழக்குப்பதிவு செய்த போலீஸ், அவரைக் கைது செய்து மருத்துவமனையிலேயே சிறை வைத்தது. ஆனால், தொடர்ந்து 16 ஆண்டுகளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வந்தார். இதனால் மூக்கு வழியாக அவருக்கு உணவு செலுத்தப்பட்டு வந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் உண்ணாவிரதத்தை அவர் முடித்தார். மணிப்பூரில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அப்போது தெரிவித்தார். இதனிடையே தற்கொலைக்கு முயன்றதாக ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இம்பால் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இருந்து ஷர்மிளாவை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். வருகிற 10ம் தேதியன்று புதிய கட்சியை தொடங்குகிறார். அம்மாநிலத்தில் தோபல் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.
இது தற்போதைய முதல்வர் ஒகராம் இபோபி சிங்கின் சொந்த தொகுதியாகும். தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் இரோம் ஷர்மிளா கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஷர்மிளாவுக்கு கெஜ்ரிவால் ஆலோசனை வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications