உ.பி... மாயாஜாலத்திற்கு முனையும் மாயாவதி... கூட்டணிக்கு வருமா காங்கிரஸ்...?
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் முலாயம் சிங் ஆகியோரைச் சமாளிக்க தலித்கள், முஸ்லீம்கள் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து தேர்தல் களத்தை மாயாவதி சந்திக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மாயாவதி கப்சிப்பென்று இருந்து வருகிறார். மகா அமைதி காக்கிறார். ஆனால் தேர்தல் நெருங்கி விட்டதால் இனியும் அப்படி இருக்க முடியாது.
லோக்சபா தேர்தலில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வெற்றியைப் பெற மாயாவதி, பல கணக்குகளைப் போட்டு வருவதாக கூறப்படுகிறது.
தவறிப் போன கவனம்
2007ம் ஆண்டு முதல் தேசிய கட்சிகளின் கவர் பொருளாக மாறியிருக்கிறார் மாயாவதி. எல்லா பிராந்தியக் கட்சித் தலைவர்களைப் போலவே, மாயாவதிக்குள்ளும் பிரதமர் கனவு ஒளிந்திருக்கிறது. ஆனால் அந்தக் கனவு படுத்திய பாட்டால், அவர் ஒரு தவறைச் செய்து விட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் அஸ்திவாரமான தலித் வாக்குகளை கவனிக்கத் தவறியதே அவர் செய்த தவறு.
விளைவு.. தேர்தலில் தோல்வி
இதன் விளைவை அவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் சந்தித்தார். பெரும் தோல்வி கிடைத்தது. முடங்கிப் போயிருந்த முலாயம் சிங் யாதவ் பெரும் எழுச்சியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். மகனையும் முதல்வராக்கி, தானும் வலுவான தலைவராக மத்தியில் திகழ்ந்து வருகிறார்.
மீண்டும் தலித்கள் பக்கம் திரும்பும் மாயா
இதை உணர்ந்துள்ள மாயாவதி, சிதறிக் கிடக்கும் தலித் வாக்குகளை மீண்டும் திரட்டி, பெரும் சக்தியாக மாற்றி, அதன் மூலம் வரும் லோக்சபா தேர்தலில் பெரும் மாயாஜாலத்தை நிகழ்த்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அவர்களை அரசியல் ரீதியாக மீண்டும் வலுவான சக்தியாக உருவெடுக்க வைக்க முனைப்பு காட்ட ஆரம்பித்துள்ளார் மாயாவதி.
பாதி ஓட்டுக்கள் கூட பதிவாகாதது ஏன்...
தலித் வாக்குகளில் இதுவரை 44 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி வருகின்றன. மீதமுள்ள 56 சதவீத வாக்குகள் எங்கே போகின்றன என்பது தெரியவில்லை. இதுகுறித்து இதுவரை மாயாவதி கவலைப்பட்டதில்லை. அதுகுறித்துக் கவலைப்படாமலேயே இருந்து வந்தார்.
இருப்பதை விட்டு விட்டு
அதாவது இருப்பதை விட்டு விட்டு கிடைக்காததற்காக பறந்து வந்தார் மாயாவதி. இத்தனைக்கும் 2009ம் ஆண்டிலிருந்தே பகுஜன் சமாஜ் கட்சி தனது முக்கிய வாக்குகளை இழக்க ஆரம்பித்து விட்டது. இதை அவர் உணரவில்லை.
நாடு முழுவதும் பரவ விருப்பம்
உ.பியில் தனது நிலையை ஸ்திரப்படுத்தாமல், பல்வேறு மாநிலங்களிலும் தனது கட்சியின் கிளைகளைப் பரப்பி தேசிய அளவில் பெரும் சக்தியாக உருவெடுக்கவும் அவர் முனைந்தார். அதுதான் பெரும் தவறாகப் போய் விட்டது.
சரிந்து போன வாக்குச் சதவீதம்
பல மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்கு சதவீதம் குறைந்து விட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் அது 5.8 ஆக இறங்கி விட்டது. உபியிலோ மோசம்.. இங்கு 4.5 சதவீதமாகவே உள்ளது. குஜராத்தில் 1.35, கர்நாடகத்தில் 1.7, சட்டிஸ்கரில் 1.8, டெல்லியில் 8.8, மத்தியப் பிரதேசத்தில் 2.7, ராஜஸ்தானில் 4.2 சதவீதம் என குறைந்து விட்டது.
ஆம் ஆத்மி வேறு
ஆம் ஆத்மி கட்சி தற்போது மாயாவதிக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
திசை மாறும் வாக்கு வங்கிகள்
தற்போது உ.பியில் வாக்கு வங்கிகள் திசை மாறத் தொடங்கியுள்ளன. முஸ்லீம்கள், முலாயம் சிங் யாதவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். முஸாபர்நகர் வன்முறை இதற்கு முக்கியக் காரணம்.
காங்கிரஸ் பக்கம் திரும்பும் முஸ்லீம்கள்
அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முஸ்லீம்கள் வாக்குகள் பெருமளவு திரும்பும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கணக்கில் வைத்து தற்போது காங்கிரஸுடன் நெருக்கம் காட்ட மாயாவதி முயல்வதாக தெரிகிறது.
முஸ்லீம்கள், தலித்களுடன் கை கோர்த்து
அதாவது முஸ்லீம் வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸுடன் சேர்ந்து, தலித் வாக்குகளின் உதவியுடன், முலாயம் சிங் யாதவை வீழ்த்துவதே மாயாவதியின் லட்சியமாக கருதப்படுகிறது.
2007ல் நடந்த மாஜிக்
2007ம் ஆண்டு மாயாவதி நிகழ்த்திய மாயாஜாலம் ஆச்சரியகரமானது. அந்தத் தேர்தலில் தலித்கள் மற்றும் பிராமணர்களின் கூட்டான ஆதரவைப் பெற்றார் மாயாவதி. இதனால் அவருக்கு மிகப் பெரிய மெஜாரிட்டி கிடைத்தது.
இப்போது அப்படி செய்ய முடியாது
ஆனால் இப்போது ஆம் ஆத்மி வந்து விட்டது. எனவே அப்போது போல இப்போது செய்வது மிகக் கடினமானது. காரணம், டெல்லியைப் போலவே உ.பியிலும் கூட ஆம் ஆத்மி பெரும் பாதிப்பையும், வாக்குப் பிரிப்பையும் மேற்கொள்ளும் என்று கருதப்படுகிறது.
ஐந்து முனைப் போட்டி
உ.பியைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி என ஐந்து முனைப் போட்டியாகவே இருக்கும் என்பது உறுதி. இந்த வாக்குகள் பிரிப்பானது பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பல கவலை..
தற்போது மாயாவதி முன்பு உள்ள சில முக்கியக் கேள்விகள் - எப்படி தலித் வாக்குகள் சிதறாமல், பிராமணர் மற்றும் மேல் தட்டு வாக்குகளைக் கவருவது, பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு விலகி வரும் தலித் வாக்கு வங்கியை எப்படி ஸ்திரமாக தக்க வைத்துக் கொள்வது ஆகியவையே...
மாயாவதியின் தந்திரோபாயங்கள் எந்த அளவுக்கு அவருக்குக் கை கொடுக்கும் என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.