ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்காக ஆன்லைனில் 'இன்டர்வியூ' நடத்தும் கர்நாடக வாலிபர்!
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பில் கர்நாடகாவை சேர்ந்த தீவிரவாதி அப்துல் காதர் சுல்தான் அர்மர் முக்கிய பங்காற்றி வருவதாக கூறுகிறது உளவுத்துறை.
அல்கொய்தாவிடம் பயிற்சி பெற்ற இவர் தற்போது வளைகுடா நாடுகளில் முகாமிட்டு இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.
யாசின் பத்கல் கைது
கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம், பத்கல் பகுதியை சேர்ந்தவரும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய புள்ளியுமான, யாசின் பத்கல் கடந்த ஆண்டு இந்திய உளவு துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அர்மர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அல்கொய்தாவிடம் ஆயுத பயிற்சி
அன்வர் பத்கல், சாபி அர்மர், ஹுசைன் பர்கான் முகமது, சலிம், அபீஸ் மோடா ஆகியோருடன் காதர் அர்மரும் சேர்ந்துதான் வடக்கு வசிரிஸ்டான் பகுதியில் அல்கொய்தாவிடம் பயிற்சி பெற்றதாக யாசின் தெரிவித்துள்ளார். இந்த காதர் அர்மரும் பத்கல் பகுதியை சேர்ந்தவர்தான்.
முஜாகிதீனை விட்டு விலகல்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அணைப்பு பெரும் எழுச்சியோடு வெளிப்பட்டபோது, இந்தியன் முஜாகிதீன் அமைப்பு அதோடு சேர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபட முடிவு செய்தது. அப்போதுதான் அர்மர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் அதிக நெருக்கம் காண்பிக்க ஆரம்பித்துள்ளார். இந்தியன் முஜாகிதீனைவிட்டுவிட்டு ஐஎஸ்ஐஎஸ்யில் தீவிரமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
முக்கிய தீவிரவாதி
இதையடுத்து வளைகுடா நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையில் அர்மர் இறங்கினார். இதனிடையே அன்சார்-உல்-தவாகித் என்ற தீவிரவாத அமைப்பை தனியாக உருவாக்கிய ஐஎஸ்ஐஎஸ், அதன் தலைவராக அர்மரை நியமித்தது. இந்த தகவல் வீடியோ மூலமாக உறுதியும் செய்யப்பட்டது. அப்போதுதான் அர்மரின் முக்கியத்துவத்தை இந்திய பாதுகாப்பு துறை கவனிக்க ஆரம்பித்தது.
பேஸ்புக்கை பயன்படுத்தி ஆள் சேர்ப்பு
அர்மர் ஒரு மக்கள்தொடர்பு அதிகாரியை போல ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆள் சேர்த்துவருகிறார். இதற்காக பேஸ்புக்கில் பல பெயர்களில் கணக்குகளை துவங்கி ஐஎஸ்ஐஎஸ்க்காக இந்தியாவில் இருந்து ஆள்பிடித்து வருகிறார். ராஜஸ்தானை சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்துக்கு செல்ல ஆர்வம் காண்பித்தபோதும் ஆன்லைனிலேயே அர்மர் நேர்முக தேர்வை நடத்தியுள்ளார். தனக்கு திருப்தி ஏற்பட்ட பிறகுதான் அவர்களை வளைகுடா வரச்சொல்லியுள்ளார்.
கண்காணிப்பு தீவிரம்
அர்மருக்கு முக்கிய பொறுப்பை அளித்துள்ளதனஅ மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியா மீது கண் வைத்துள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே அர்மர் மீது இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளும் கண் வைத்துள்ளன. எந்த நேரத்திலும் அவரை பிடித்துவிடுவோம் என்று உறுதியளிக்கிறார்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்.