ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆள் சேர்த்த பெங்களூர் இளைஞருக்கு 5 நாள் விசாரணைக் காவல்: கோர்ட் உத்தரவு
பெங்களூரு : டுவிட்டர் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக கைது செய்யப்பட்ட பெங்களூரு பொறியாளரை 5 நாள் விசாரணைக் காவலில் வைக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் இயங்கி வரும் எம்.என்.டி. நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தவர் மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற பொறியியல் பட்டதாரி. இவர் டுவிட்டர் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக ஆட்களைத் தேர்வு செய்து அனுப்பி வந்ததாக இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து மேதியை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், ‘ஷமிவிட்னஸ்' என்ற பெயரில் ஒரு இணையப் பக்கத்தை ஏற்படுத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததை மேதி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மெஹதி மீது இந்திய குற்றவியல் சட்டம் 125(அரசுக்கு எதிராக போர் தொடுப்பது-துணை நிற்பது-தூண்டி விடுவது), இந்திய குற்றவியல் சட்டம் 18 மற்றும் 39(சட்டப்புறம்பான காரியங்களில் ஈடுபடுதல்), தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஆகிய பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நேற்றிரவு பெங்களூர் நகர மாஜிஸ்திரேட்டின் முன்னிலையில் மேதி ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டதன்படி, மேதியை 5 நாள் விசாரணை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.