பெங்களூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்கப் போகும் இஸ்ரேலிய நிபுணர்கள் குழு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய, நீரை சேமிக்க இஸ்ரேலிய நிபுணர்களின் உதவியை நாட உள்ளது கர்நாடக அரசு.
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துவிட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடாக உள்ளது. பெங்களூர் நகரில் உள்ள ஏரிகள் பல மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய, நீரை சேமிக்க இஸ்ரேலிய நிபுணர்களின் உதவியை நாட உள்ளது கர்நாடக அரசு. நீர் சேமிப்பு குறித்து இஸ்ரேலிய நிபுணர்கள் குழுவை சந்தித்து பேசிய கர்நாடக அரசு அவர்களை பணியமர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து இஸ்ரேலிய நிபுணர் உரி ஸ்கோர் கூறுகையில்,
நீரை சேமிக்குமாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிரச்சாரத்தை முறையாக செய்து வெற்றி கண்டால் நகரின் தண்ணீர் பயன்பாட்டை 20 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றார்.
தண்ணீரை சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். வறட்சியாக உள்ள நிலையில் இது மிகவும் முக்கியம் என இஸ்ரேலிய நிபுணர்கள் கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளனர்.
பெல்லந்தூர் ஏரி மிகவும் மோசமாக மாசடைந்து இருப்பதால் மக்கள் அரசு மீது கோபம் அடைந்த நிலையில் இஸ்ரேலிய நிபுணர்களின் உதவி நாடப்பட உள்ளது.