விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைகோள்!
தெற்காசிய நாடுகளுக்கான ஜி சாட்9 செயற்கை கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா : தெற்காசிய நாடுகள் பேரிடர் குறித்த தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்கான ஜிசாட் 9 செயற்கைகோள் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்-9 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி-எப் 09 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா 2வது ஏவுதளத்தில் இருந்து மாலை 4.57 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. பாகிஸ்தான் தவிர சார்க் அமைப்பில் உள்ள 7 நாடுகளும் பயன்பெறும் வகையில் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜிஎஸ்எல்வி-எப் 09 ராக்கெட்டில் எரிபொருள் நிரம்பும் பணி கடந்த செவ்வாய்கிழமையன்று தொடங்கியது. ராக்கெட் ஏவுவதற்கான கடைசி கவுன்டவுன் நேற்று தொடங்கியது. இன்று வானிலை சரியாக இருந்ததால் மாலை சரியாக 4.57 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்டது இந்த செயற்கைகோள். பாகிஸ்தான் தவிர்த்து சார்க் கூட்டமைப்பு நாடுகளான நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த செயற்கைகோள் மூலம் பயன்பெறும். இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய போது சார்க் நாடுகளின் தகவல் பரிமாற்றங்களுக்கான செயற்கைகோளை இந்தியா செலுத்தும் என கூறி இருந்த நிலையில் இன்று தெற்காசி நாடுகளுக்கான ஜிசாட் 9 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.