மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு: வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 1,00,000 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய் கிரத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மங்கள்யான் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது.
இதை நேரடியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியாது. முதலில் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அதன் வேகத்தையும் உயரத்தையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். உரிய அளவு வேகம் கிடைத்தவுடன் அதை செவ்வாய் கிரகத்தை நோக்கி அதிவேகத்தில் திசை திருப்ப ('slingshot') வேண்டும்.
இதற்காக அதன் சுற்றுப்பாதை உயரத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்த வேண்டும். முதல் மூன்று சுற்றுப்பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. நவம்பர் 9ம் தேதி விண்கலத்தின் உயரம் 71,000 கிலோமீட்டர் அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக அதில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன.
ஆனால், அந்த ராக்கெட்டுகள் திட்டமிட்டப்படி சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக மங்கள்யான் விண்கலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை. ஆனாலும் ராக்கெட்டுகளில் இருந்த எரிபொருள் வீணாக்கப்படவில்லை. இதனால் அந்த ராக்கெட்டுகளை மீண்டும் இயக்க முடியும்.
இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.
நேற்று இரவு மங்கள்யானில் உள்ள கருவி செயல்படாவிட்டாலும் நாளை அதிகாலை அதை மீண்டும் இயக்கும் பணி நடைபெற உள்ளது. அப்போது வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.