ஒப்பந்தம் தடாலடி ரத்து.. தேவாஸ் நிறுவனத்திற்கு ரூ. 4435 கோடி நஷ்டஈடு வழங்க இஸ்ரோவுக்கு உத்தரவு
டெல்லி: தேவாஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததால், அந்த நிறுவனத்திற்கு இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் ரூ. 4435 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சர்வதேச சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவுதான் ஆண்ட்ரிக்ஸ். தேவாஸ் மல்ட்டிமீடியா நிறுவனத்துடன் இது ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் பாதியிலேயே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதையடுத்து சர்வதேச தீர்ப்பாயத்தை அணுகியது தேவாஸ். இதை விசாரித்த தீர்ப்பாயம் தற்போது இஸ்ரோ, தேவாஸுக்கு 672 மில்லியன் டாலர், அதாவது இந்தியத் தொகையில் ரூ. 4435.20 கோடி இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தேவாஸ் கூறுகையில், ‘எங்களுக்குச் சாதகமாக இந்த தீர்ப்பை அளித்துள்ளது சர்வதேச தீர்ப்பாயம். சட்டவிரோதமான முறையில் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரோ ரத்து செய்துள்ளதாக அது தீர்ப்பளித்துள்ளது' எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை அமல்படுத்த தற்போது கோர்ட்டின் உதவியை நாடி அதற்கு சட்டப்பூர்வ உயிர் கொடுக்க வேண்டும் தேவாஸ். அனேகமாக இதுதொடர்பாக அது ஏற்கனவே வழக்குத் தொடர்ந்துள்ள டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்.
தேவாஸ் நிறுவனத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு டெலிகாம் ஏஜி, அமெரிக்க நிறுவனங்களான கொலம்பியா கேப்பிடல் எல்எல்சி, டெலிகாம் வென்சர்ஸ் எல்எல்சி ஆகியவை முதலீடு செய்துள்ளன. இவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே சர்வதேச தீர்ப்பாயத்தை அணுகியது தேவாஸ்.
இஸ்ரோவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இஸ்ரோ ஏவவிருந்த 2 செயற்கைக் கோள்களுக்குத் தேவையான 70 மெகாஹெர்ட்ஸ் எஸ்பேண்ட் அலைவரிசையை தேவாஸ் வழங்க வேண்டும். இதற்காக தேவாஸ் நிறுவனம் 12 ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதை தேவைப்பட்டால் மேலும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை கடந்த 2011ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.
2ஜி ஊழல் பின்னணியில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது. இதையடுத்து தேவாஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.