இது திட்டமிட்ட திருட்டு.. சட்டப்பூர்வ கொள்ளை... நாடாளுமன்றத்தில் வெளுத்து வாங்கிய மன்மோகன் சிங்
பிரதமர் அவர்களே, உலகின் எந்த நாட்டிலாவது தன் பணத்தை டெபாசிட் செய்த மக்களை, அதை எடுக்க அனுமதிக்க மறுப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் நடவடிக்கையைக் கண்டிக்க இது ஒன்று போதாதா?
மோடியின் இந்த பண ஒழிப்பு என்பது அதிகாரப்பூர்வமான கொள்ளை, சட்டப்பூர்வமான பெருந் தவறு!
-இப்படிப் பேசியவர் வேறு யாருமல்ல, நமது முன்னாள் பிரதமர், பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங்தான்.
இன்று ராஜ்யசபையில் பிரதமர் மோடியின் பண ஒழிப்புத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தனது கருத்தை முன்வைத்துப் பேசினார் டாக்டர் சிங்.
வழக்கம்போல மிக மெதுவாக, அமைதியான குரலில் தொடங்கிய மன்மோகன் சிங், இந்த பண ஒழிப்பு என்பது நிச்சயம் பேரழிவைத் தரும் என்பதை வலியுறுத்தினார்.
பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸின் புகழ்பெற்ற ஒரு மேற்கோளைச் சுட்டிக் காட்டிப் பேசிய சிங், "கீன்ஸ் சொன்னது போல, இதுபோன்ற திட்டங்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில் சாகடித்துவிடும்," என்றார் அழுத்தமாக.
"இந்த பண ஒழிப்பு என்பது, அதிகாரப்பூர்வமான கொள்ளை, சட்டப்படியான பெருந்தவறு. இதை அனுமதிக்க முடியாது. திட்டத்தில் அந்த ஓட்டை இந்த ஓட்டை என்று குறை கூறுவது என் நோக்கமல்ல. இது மக்கள் விரோதம். மக்கள் பெருந்துயரத்தில் உள்ளனர். அதைத் தீர்க்க ஒரு மாற்றுத் திட்டத்தைச் சொல்லுங்கள் பிரதமர் அவர்களே... அல்லது திட்டத்தை வாபஸ் பெறுங்கள்," என்று கூறி முடித்தபோது, அவையில் பலத்த கைத்தட்டல்.