2 தொகுதிகளில் மோடி போட்டி.. குஜராத்தின் வதோதராவிலும் நிற்கிறார்!
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது குஜராத் மாநிலம் வதோதராவிலும் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் மோடியை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று கெஜ்ரிவால் அறிவித்திருந்த நிலையில், 2வது தொகுதியில் மோடி போட்டியிடுவதை பாஜக அறிவித்துள்ளது.
இருப்பினும் மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்று சில நாட்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது. குறிப்பாக தனது சொந்த மாநிலமான குஜராத்திலும் அவர் போட்டியிடுவார் என்று உறுதியாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தற்போது மோடி, குஜராத்திலும் போட்டியிடுகிறார்.
தற்போது குஜராத் மாநிலத்தில் 4வது முறையாக முதல்வராக இருந்து வருகிறார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் தேசிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அகமதாபாத் கிழக்கு தொகுதியை மோடிக்குத் தருவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டது. அங்கு தற்போது உறுப்பினராக ஹரேன் பாதக் இருந்து வருகிறார். இவர் அத்வானியின் தீவிர விசுவாசி. அவரது தொகுதியைப் பறித்து மோடிக்குக் கொடுத்தால், அது அத்வானியை கேவலப்படுத்துவது போலாகி விடும் என்று பயந்து போய்தான் வதோதாராவைக் கொடுத்துள்ளனராம்.
ஏற்கனவே தனக்குப் பிடிக்காத காந்தி நகரை மீண்டும் கட்சி கொடுத்துள்ளதால் கடுப்பாக இருக்கிறார் அத்வானி என்பது நினைவிருக்கலாம்.
வதோதரா தொகுதியானது மத்திய குஜராத்தில் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் அதிக அளவில் வாழும் தொகுதியாகும் இது. இங்கு பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
ஆனால் வலுவான தொகுதியில் போய் மோடியை போட்டியிட வைப்பதன் மூலம், கட்சிக்கு வலு இல்லாத பிற பகுதிகளில் கட்சி நிலை மேலும் மோசமாகும் என்று குஜராத் பாஜக தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.