காஷ்மீர் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
87 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு நவம்பர் 25ம் தேதி முதல் இன்றுவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், பாஜக என நான்குமுனை போட்டி அங்கு நிலவியது.
ஜம்மு காஷ்மீரில் சுத்தமாக செல்வாக்கிழந்திருந்த பாஜக, இந்த தேர்தலில் தன்னை பெரிதாக முன்னிறுத்தியது. பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீரில் பல கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இன்றுடன் 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பிரபல ஆய்வு நிறுவனம் சி-வோட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய மாநாட்டு கட்சி 8 முதல், 14 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 32 முதல் 38 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அதே நேரம் பாஜக 27-33 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் 4 முதல் 10 இடங்களிலும், பிறர் 2 முதல் 8 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஆட்சியை பிடிக்க குறைந்தது 44 இடங்கள் தேவை. ஆனால் கருத்துக் கணிப்பு முடிவுப்படி எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை பிடிக்க முடியாது என்று தெரிகிறது. தனிப்பெரும் கட்சியாக மக்கள் ஜனநாயக கட்சி உருவெடுத்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.