காஷ்மீர் மாணவர்களுக்கு உதவுங்கள் என்று கூறிய பல்கலைக்கழக துணைவேந்தரைத் தாக்கிய வி.ஹெச்.பி.!
உஜ்ஜைன்: ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மத்திய பிரதேசத்தில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு உதவி செய்யுமாறு மக்களை கேட்டுக் கொண்டதற்காக உஜ்ஜைனில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆட்களால் தாக்கப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ளது விக்ரம் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜவஹர் லால் கவ்ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய பிரதேசத்தில் தங்கி படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவ, மாணவியருக்கு மாநில மக்கள் உதவ வேண்டும். அவர்களிடம் வாடகையும், கல்வி கட்டணமும் வாங்காமல் உதவி செய்ய வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டபோது கவ்ல் இப்படி அறிக்கை விடவில்லை. ஆனால் காஷ்மீர் மாணவர்களுக்காக மட்டும் அறிக்கை விட்டுள்ளார் என்று கூறி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆட்கள் போராட்டம் நடத்தினர். திங்கட்கிழமை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆட்கள் துணை வேந்தர் கவ்லின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதுடன் அவரையும் தாக்கினர். இதையடுத்து கவ்ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போராட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்தின் பிற இடங்களிலும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு உஜ்ஜைனில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆட்கள் தாக்கியதில் மாரடைப்பு ஏற்பட்டு பேராசிரியர் ஹெச்.எஸ். சபர்வால் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.