கிருஷ்ண ஜெயந்தி: ராஜஸ்தான் தர்காவில் 3 நாட்கள் கோலாகல கொண்டாட்டம்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் உள்ள முஸ்லீம்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ளது நார்ஹர் தர்கா. ஷரிப் ஹஸ்ரத் ஹஜிப் ஷகர்பார் என்றும் கூறப்படும் அந்த தர்கா ஜெய்பூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி நேற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது.
இது குறித்து தர்காவின் செயலாளர் உஸ்மான் அலி பதான் கூறுகையில்,
கடந்த 300 முதல் 400 ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி விழா இந்த தர்காவில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொள்கிறார்கள். இந்து, முஸ்லீம் இடையேயான சகோதரத்துவத்தை மேம்படுத்துவதே இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த விழாவில் மகாராஷ்டிரா, பீகார், டெல்லி, ஹரியானா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் மக்கள் கலந்து கொள்வார்கள். ஆயிரக்கணக்கான இந்துக்கள் இங்கு வந்து மலர் தூவி வணங்குவதுடன், தேங்காய், இனிப்புகளும் வழங்குவர். இந்த விழா எந்த ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது என்பது சரியாகத் தெரியவில்லை என்றார்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தர்காவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ண ஜெயந்தி விழா இந்த தர்காவில் 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.