ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: இன்றும் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்- மேலும் ரூ65 ஆயிரம் அபராதம் விதிப்பு!!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொதுக்குவிப்பு வழக்கில் இன்றும் ஆஜராகாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மேலும் ரூ. 65,000 அபராதம் விதித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி வாதம் கடந்த 7ந் தேதி துவங்க வேண்டியது. ஆனால் அன்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கட்ந்த 10ந் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் பவானி சிங் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 10ந் தேதியும் பவானி சிங் ஆஜராகவில்லை. ஆனால் அவரது உதவி வழக்கறிஞர் ஆஜராகி மருத்துவ சான்றிதழை சமர்பித்தார்.
இதையடுத்து நீதிபதி இறுதி வாதத்ததை நேற்று ஒத்தி வைத்ததுடன் பவானி சிங்குக்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் பவானி சிங் நேற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி குன்ஹா, பவானி சிங்குக்கு ஒரு நாள் சம்பளமான ரூ.65,000 அபராதம் விதித்தார். மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்தார்.
இந்நிலையில் இன்றும் பவானிசிங் ஆஜராகாவிட்டால் மேலும் ரூ65 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி குன்ஹா எச்சரித்திருந்தார். ஆனாலும் இன்றைய விசாரணையின் போதும் பவானிசிங் ஆஜராகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி குன்ஹா, மேலும் ரூ 65 ஆயிரம் அபராதத்தை பவானிசிங்குக்கு இன்று விதித்தார்.