மேல்முறையீட்டு வழக்கு: ஜெ.சசி உள்ளிட்ட 4 பேர் வாதம் நிறைவு- பவானிசிங் கோரிக்கை நிராகரிப்பு
பெங்களூரு: பெங்களூரு உயர்நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைந்தது. தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
அரசு தரப்பு இறுதிவாதத்துக்கு 5 நாள் அவகாசம் கேட்டார் அரசு வழக்கறிஞர் பவானிசிங் பவானிசிங் கோரிக்கையை சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி நிராகரித்தார்.
ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, சசிகலா வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை நிறைவு செய்த நிலையில், சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர் சுதந்திரம் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
சுதாகரன் தரப்பு வாதத்தை நிறைவு செய்த வழக்கறிஞர் சுதந்திரம், இளவரசி தரப்பில் வாதத்தை தொடங்கினார். 1991 முதல் 1996 வரை இளவரசியின் வருவாய் செலவு ஆவணங்களை சமர்ப்பித்த அவரது வழக்கறிஞர், ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிறுதாவூர் பங்களாவை 4 கோடி ரூபாய் என அரசு தரப்பில் உயர்த்திக் காட்டியுள்ளதாக வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிக்கும், வழக்கறிஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சொத்துக்குவிப்பு வழக்கு பொய் வழக்கு என நிரூபிக்கும் வகையில் எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கூறினார்.
வாய்மொழியான வாதங்களை வைத்து தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில்தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும் என்றும் நீதிபதி கண்டித்ததோடு வழக்கு 20ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். தொடர்ந்து இளவரசி தரப்பு வாதம் இன்று தொடங்கியது. வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை முன்வைத்து நிறைவு செய்தார்.
31 நாட்கள்
சுதாகரன், இளவரசி தரப்பில் வழக்கறிஞர் சுதந்திரம் தலா 6 நாட்கள் வாதாடினார். 31 நாள் விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் தலா 9 நாட்கள் வாதம் நடைபெற்றது.
ஜெயலலிதா தரப்பில்
ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் பசந்த், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, கிருஷ்ணமூர்த்தி, திவாகர், செல்வக்குமார், பரணிகுமார், தனஞ்செயன் மற்றும் இவர்களோடு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் ஆகியோரும் ஆஜராகியுள்ளனர்.
அரசு தரப்பில்
அரசு தரப்பில் பவானி சிங்கும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜி., குணசீலனும் டி.எஸ்.பி சம்பந்தமும் ஆஜராகிறார்கள்.
தனியார் நிறுவனங்கள்
தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தனியார் நிறுவனங்களின் வாதம் தொடங்கியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு வழக்கை மட்டுமே தம்மை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டார் அதனால் நிறுவனங்களின் மனுவை தாம் ஏன் விசாரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இத்தனை கோடி சொத்துகள் முடக்கப்பட்டது இதுநாள் வரையில் தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பிய அவர், இவ்வளவு நாள் கடந்த பிறகு தற்போது முறையீடு செய்வது ஏன் என்றும் நிறுவனங்களிடம் நீதிபதி கேட்டார்.
அடுக்கடுக்கான கேள்விகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் முன்பாக, நீதிபதி குமாரசாமி அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கிடம், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி குறித்து பல கேள்விகளை எழுப்பினார்.
கோரிக்கை நிராகரிப்பு
அதற்கு அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லையென பவானி சிங் பதிலளித்தார். பின்னர் அரசுத் தரப்பு வாதம் எப்போது தொடங்கும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர்களின் வாதம் முடிந்தவுடன் அரசுத் தரப்பு வாதம் தொடங்கும் என பவானிசிங் தெரிவித்தார். தொடர்ந்து அவர், அரசு தரப்பு இறுதிவாதத்துக்கு 5 நாள் அவகாசம் கேட்டார், ஆனால் பவானிசிங் கோரிக்கையை சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி நிராகரித்தார்.
மார்ச்சில் தீர்ப்பு
அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க 4 நாட்கள் கேட்டுள்ளார். ஆக, அடுத்த வாரத்தில் அனைத்துத் தரப்பு வாதமும் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேகத்தோடு வாதங்கள் முடிவடையும் பட்சத்தில் மார்ச் முதல் வாரம் அல்லது மார்ச் 2-வது வாரத்தில் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.