பெங்களூர் நீதிமன்றம் வந்து சேராத ஜாமீன் ஆர்டர்: நாளைதான் ஜெயலலிதா ரிலீஸ்!
டெல்லி: ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருந்தும், இன்றே அவர் சிறையில் இருந்து விடுதலையாக முடியாமல் போனது துரதிருஷ்டமே.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் பாலி நாரிமன் கேட்டார்.
ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவர்களிடமிருந்து தேவைப்படும் மருத்துவ ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் பெற்றதால், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அரசு வக்கீல் இல்லாமலேயே விசாரணையை எதிர்கொண்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பின் பிரதி, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா முன் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
நீதிபதி குன்ஹா அதை பரிசீலித்து ஜாமீனுக்கு தேவையான பிணையை பெற்ற பிறகு, பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு ஆர்டர் அனுப்ப வேண்டும். அந்த ஆர்டர் மத்திய சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சேர்ந்த பிறகே ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியும்.
எனவே சிறப்பு நீதிமன்றம், அங்கிருந்து சிறை என இந்த அலைச்சலுக்கு கால அவகாசம் தேவைப்படும். இன்றே அந்த பணிகளை முடிப்பது சிரமம்தான் என்றாலும் சிறை அதிகாரி ஜெய்சிம்ஹா தான் ஆர்டர் வந்ததும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டதாக பேட்டி அளித்தார்.
ஆனாலும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் நடைமுறையை முடித்துவிட்டால் ஜெயலலிதாவை விடுதலை செய்யலாம் என்று அதிமுக தரப்பு குஷியாக இருந்தது. பிணை கொடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து வக்கீல்கள் வந்து சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் காத்திருந்தனர்.
ஆனால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாலை வரை வராததால் வக்கீல்கள் நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தனர். சிட்டி சிவில் கோர்ட் ரிஜிஸ்டார் சந்திரசேகர் மார்கூரை சென்று அவ்வப்போது பார்த்து, ஆர்டர் வந்துவிட்டதா, ஆர்டர் வந்து விட்டதா என்று கேட்டபடி இருந்தனர். சுமார் ஐந்து முறை இவ்வாறு அவர்கள் கேட்டனர். ஆனால் ரிஜிஸ்டரோ, இன்னும் பேக்ஸ் மூலமாக கூட வரவில்லை. நீங்கள் வேண்டுமானால் பேக்ஸ்சை செக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனிடையே டெல்லி சென்றிருந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா, மதியத்துக்கு மேலே பெங்களூர் திரும்பினார். அவரும் சிவில் கோர்ட்டுக்கு வந்து அலுவல்களில் மூழ்கியிருந்தார். மாலை 5.30 மணியானதும் கோர்ட் நேரம் முடிந்தது. குன்ஹாவும் கிளம்பி சென்றுவிட்டார். ஆனால் அதுவரை சுப்ரீம் கோர்ட் ஆர்டர் வராததால் ஜெயலலிதாவை இன்று ரிலீஸ் செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
ஆர்டர் காப்பி வந்த பிறகு ஜெயலலிதா நாளைக்குத்தான் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டு 22வது நாள்தான் ரிலீஸ் ஆக உள்ளார் ஜெயலலிதா.