அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகளுக்கு ஜாமீன் கிடைப்பது கஷ்டம்: மூத்த வக்கீல் ஆச்சார்யா
பெங்களூர்: பிற வழக்குகளை போல அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகளை கோர்ட் எடுத்துக்கொள்வதில்லை என்று சொத்துக்குவிப்பு வழக்கின் முன்னாள் அரசு வக்கீல் ஆச்சார்யா தெரிவித்தார்.
ஜெயலலிதா ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பி.வி.ஆச்சார்யா கூறியதாவது:

முக்கிய நபர்கள் செய்த ஊழல் வழக்குகளை, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் செஷன்ஸ் கோர்ட்டில் முடித்துவிட வேண்டும். அவர்கள் அதை எதிர்த்து மேல் கோர்ட்டுகளுக்கு செல்லும்போது அதைவிட குறுகிய காலத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனைத்து கோர்ட்டுகளுக்கும் வழிகாட்டு நெறிமுறையை வழங்கியுள்ளது.
இது ஊழல் அரசியல்வாதிகள் வழக்குகள் தொடர்பான பொதுவான வழிகாட்டு நெறிமுறையாகும். ஏனெனில் உயர் பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதை உச்சநீதிமன்றம் தனது அனுபவத்தில் உணர்ந்துள்ளது. இதன்பேரில்தான் ஹைகோர்ட் நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரித்திருப்பார் என்று கருதுகிறேன்.
மேலும், ஜெயலலிதா ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் எந்த மாதிரி முடிவெடுக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியாது. ஆனால் இந்த வழக்கின் போக்கு உச்சநீதிமன்றத்தில் கையில் உள்ளது என்று என்னால் கூற முடியும். இவ்வாறு பி.வி.ஆச்சார்யா தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரைகள் காரணமாகத்தான், அரசு வக்கீல் ஆட்சேபனை இல்லை என்று கூறியபிறகும், ஊழல் வழக்கில் ஜாமீன் கிடையாது என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும், 4 ஆண்டுகள் சிறை என்பது குறுகியகாலம்தானே, எனவே ஜாமீன் கிடைத்துவிடும் என்ற பொது கருத்தையும் நீதிபதி தவிடு பொடியாக்கியுள்ளார். இதுபோன்ற பொது கணக்கீடுகள், இனிமேல் ஊழல் வழக்குகளில் செல்லுபடியாகாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications