பெங்களூர் சிறை கைதிகளுக்கு லட்டு, சேலை வினியோகம்: ஜெயலலிதா ஏற்பாடு
பெங்களூர்: உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்த செய்தி கிடைத்ததும் சிறையிலுள்ள சக பெண் கைதிகளுக்கு லட்டு வினியோகித்து ஜெயலலிதா மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.
21 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க இன்று உச்ச நீதிமன்றம் முன்வந்தது. பெண்கள் சிறை பகுதியிலுள்ள தொலைக்காட்சியில் இந்த செய்தியை பார்த்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் மகிழ்ச்சியடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் சிலரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே ஜெயலலிதா உத்தரவின்பேரில் லட்டுகள் வாங்கிவரப்பட்டு சிறையிலிருந்த பெண் கைதிகளுக்கு வினியோகிக்கப்பட்டதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல ஏழை பெண் கைதிகள் 21 பேருக்கு புடவை வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜாமீன் கிடைத்தும் பிணைத் தொகை அளிக்க முடியாமல் சிறையிலுள்ள 3 பெண் கைதிகளுக்கு பிணைத் தொகை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளாராம். இதை அந்த கைதிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்ததாக சிறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
மேலும், சிறையில் இருந்த 21 நாட்களும் ஜெயலலிதா அங்குள்ள துளசி மாடத்தை சுற்றி வணங்கி வந்ததாகவும், நாராயணமூர்த்தியை நினைத்து விரதம் இருந்ததாகவும் கூட சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் லட்டு கொடுத்தது, சேலை கொடுத்த தகவல்களை வழக்கம்போல நாளை ஜெயில் டிஐஜி ஜெயசிம்மா மறுப்பார் பாருங்களேன்.












Click it and Unblock the Notifications