ஜெயலலிதா சிறையில் அனுபவித்த சலுகைகள் என்ன? மேலும் ஒரு பெட்டிஷனை போட்ட ஆர்.டி.ஐ ஆர்வலர்
பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு அளித்த சலுகைகளை வெளியே சொல்லாமல் கர்நாடக சிறை அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள் என்று ஆதங்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான நரசிம்மமூர்த்தி, இதுகுறித்து உண்மையை கண்டறியே மேலும் ஒரு ஆர்.டி.ஐ விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதாக கூறினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பெற்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். மொத்தம் 22 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனை ஜாமீனையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சலுகைகள் தரப்பட்டனவா?
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அவரது அறைக்கு ஏசி வசதி செய்து கொடுக்கப்பட்டது, வீட்டு சாப்பாடு அளிக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் மீடியாக்களில் கசிந்தன. ஆனால் சிறைத்துறை டிஐஜியான ஜெயசிம்ஹாவோ, ஜெயலலிதாவுக்கு எந்த சலுகையும் தரவில்லை என்று மீண்டும், மீண்டும் மறுத்து வந்தார்.

ஆர்டிஐ பதில்களில் திருப்தியில்லை
மீடியாக்களில் வெளியான தகவலில் உண்மை இருப்பதாக கருதிய பெங்களூருவை சேர்ந்த மனித உரிமை மற்றும் ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்மமூர்த்தி ஆர்.டி.ஐ மூலமாக சிறைத்துறை அதிகாரிகளிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அந்த பதிலில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை தரவில்லை, சிறையில் அவரை யாரும் சந்திக்கவில்லை என்பது போன்ற பதில்கள் அவருக்கு கிடைத்திருந்தன. ஆனால் அந்த பதில்களில் திருப்தியில்லை என்கிறார் நரசிம்மமூர்த்தி.

பரப்பன அக்ரஹாரா போயஸ்கார்டனாக மாறியது
தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நரசிம்மமூர்த்தி கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையை மற்றொரு போயஸ் கார்டனாக மாற்றி வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறையில் அவரை பலரும் சந்தித்ததாக எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆனால் சிறை அதிகாரிகள் உண்மையை மறைக்கிறார்கள். எனவே மீண்டும் ஒருமுறை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எனது நான்கு கேள்விகளுக்கு விடை கேட்டுள்ளேன்.

கோர்ட் அனுமதி உள்ளதா?
கைதி ஒருவருக்கு வீட்டு உணவை சாப்பிட அளிக்க வேண்டும் என்றால், கோர்ட் உத்தரவு அல்லது மருத்துவரின் சிபாரிசு போன்றவை தேவை. அதுபோன்ற உத்தரவை சிறை அதிகாரிகள் பெற்றுள்ளனரா என்று கேட்டுள்ளேன்.

அனுமதித்தது யார்?
வீட்டு சாப்பாட்டை சாப்பிட அனுமதித்த அதிகாரி யார், அல்லது அனுமதி கொடுத்த அமைப்பு எது, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த மருத்துவ சான்றிதழ் என்ற விவரத்தை அளிக்குமாறும் கேட்டுள்ளேன்.

சந்தித்தவர்கள் யார்?
ஜெயலலிதாவை சிறை வளாகத்தில் சந்தித்த நபர்களின் பெயர்கள், அவர்களின் பதவி போன்ற விவரத்தையும், ஜெயலலிதாவுக்கான சிறைச்சாலை பொறுப்பு அதிகாரி விவரங்களையும் கேட்டுள்ளேன்.

சிறைத்துறை ஐஜிக்கு கேள்வி
பெங்களூரு சேஷாத்திரிபுரத்திலுள்ள, கூடுதல் டிஜிபி மற்றும் ஐஜிபி சிறைத்துறை அலுவலகத்திடம்தான் இந்த கேள்விகளை கேட்டுள்ளேன் என்றார் நரசிம்மமூர்த்தி.

இரு மாநில பிரச்சினையாச்சே..
இதனிடையே, இரு மாநில பிரச்சினை என்பதால், ஜெயலலிதா குறித்த மேலதிக தகவல்களை கேட்க வேண்டாம் என்று சிறை அதிகாரிகள் சிலர் தன்னை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறிவிட்டதாகவும் கூறும் நரசிம்மமூர்த்தி உண்மை வெளியே வரும்வரை தனது போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்கிறார் உறுதியோடு.

மிரட்டல்கள் சகஜமப்பா
மேலும், தனக்கு தொலைபேசி வாயிலாக சிலரால் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கூறும் நரசிம்மமூர்த்தி, பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் சகஜமே. எனவே உயிரை பற்றி நான் அச்சப்படவில்லை என்கிறார்.












Click it and Unblock the Notifications