சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் ஜெ., சசிகலா பெங்களூர் பயணம்.. ராகு காலத்திற்கு முன்பாக!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை கேட்க முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா நாளை காலை பெங்களூர் வரும் நிலையில், இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று இரவே பெங்களூர் வருகின்றனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை, சனிக்கிழமை காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதை கேட்க ஜெயலலிதா நேரில் ஆஜராவதால் பெங்களூர் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிவரை ராகு காலம் என்பதால், இன்றே ஜெயலலிதா பெங்களூர் வந்து ஹோட்டலில் தங்கிவிட்டு நாளை காலையில் ராகு காலம் முடிந்ததும் கிளம்புவார் என்று ஒரு தரப்பு கூறிவந்தது. ஆனால் அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என்று கர்நாடக போலீசார் தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து பெங்களூர் நகர போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இசெட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு இடத்துக்கு போனாலும் உள்ளூர் காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஜெயலலிதா சனிக்கிழமை வருவதாகத்தான் எங்களுக்கு தகவல் வந்துள்ளதே தவிர, வெள்ளிக்கிழமை வருவதாக தகவல் வரவில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தினம் மூலம் காலை 8 மணிக்கு பெங்களூர் கிளம்புவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் சசிகலாவும் விமானத்தில் வர உள்ளாராம். பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வந்திறங்கும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக, 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு செல்ல உள்ளார்.
இதன் மூலம், ராகுகாலத்திற்கு முன்பே வீட்டில் இருந்து கிளம்பிவிட்டு, ராகுகாலம் முடிந்த பிறகு கோர்ட் வளாகத்திற்குள் ஜெயலலிதாவால் வர முடியும்.
அதே நேரம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று இரவே பெங்களூர் வந்து, ஹோட்டலில் தங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications